விளக்கம் தர காங். மேலிடம் உத்தரவு... டெல்லி விரைந்தார் ஈ.வி.கே.எஸ்... நடவடிக்கை வருமா?
டெல்லி: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் டெல்லி சென்றுள்ளார். தமிழக முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் குறித்த பேச்சு தொடர்பாக அங்கு இளங்கோவனிடம் கட்சி மேலிடம் விசாரணை நடத்த உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபகாலமாகவே காமராஜர் குறித்து விரும்பத்தகாத வகையில் பேசி வரும், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம் மீது இளங்கோவன் கோபத்தில் உள்ளார். இந்நிலையில், சமீபத்தில் தனது ஆதரவாளர்களுடன் ரகசிய சந்திப்பு நடத்திய கார்த்தி சிதம்பரம், ஜி67 என்ற அமைப்பை உருவாக்கினார்.
கட்சி மேலிட அனுமதி பெறாமல் கூட்டம் நடத்தியதாக கார்த்திக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டது. அந்த நோட்டீசிற்கு உரிய விளக்கம் அளிக்கப்படாத பட்சத்தில் கார்த்தியை கட்சியில் இருந்து நீக்கப் போவதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்திருந்தார்.
ஆனால், கட்சியிலிருந்து தன்னை நீக்க இளங்கோவனுக்கு எந்த அதிகாரமுமில்லை என கார்த்தி பேட்டியளித்திருந்தார். இந்த தொடர் சம்பவங்களால் கார்த்தி, இளங்கோவனுக்கு இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வந்தது.
இந்நிலையில், கடந்த வெள்ளியன்று முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் காங்கிரசில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அப்போது, காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா மற்றும் துணைத்தலைவர் ராகுல் மீது அவர் அடுக்கடுக்கான புகார்களைத் தெரிவித்திருந்தார்.
இது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அளித்த பேட்டியில், ‘ஜெயந்தி நடராஜனின் தாத்தாவும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான பக்தவத்சலம் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்தார். மேலும், ஜெயந்தி கட்சியை விட்டு விலகியதற்கு நன்றி தெரிவித்த இளங்கோவன், இதைப்போலவே முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரமும், அவரது மகனும் கட்சியை விட்டு வெளியேறினால் நலமாக அமையும் என மறைமுகமாகத் தாக்கி பேசினார்.
இளங்கோவனின் இந்தப் பேச்சு காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக இளங்கோவனை, போனில் சோனியா கண்டித்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், டெல்லி சென்று ராகுலை நேரில் சந்தித்த சிதம்பரம், இளங்கோவனின் பேச்சு தொடர்பாக புகார் அளித்தார். சுமார் அரைமணி நேரம் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, தமது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கும், இளங்கோவனுக்கும் இடையிலான கருத்து மோதல்கள் குறித்து சிதம்பரம் பேசியதாகக் கூறப்படுகிறது.
அதன் எதிரொலியாக இளங்கோவனை கட்சி மேலிடம் டெல்லி அழைத்துள்ளது. டெல்லி சட்டசபைத் தேர்தல் பிரச்சாரத்திற்காக இளங்கோவன் டெல்லி சென்றுள்ளதாகக் கூறப்பட்டாலும், அங்கு அவரிடம் இப்பிரச்சினை தொடர்பாக விசாரிக்கப் படும் என கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, டெல்லியில் இன்று சோனியா, ராகுல் உள்ளிட்டோரைச் சந்திக்கிறார் இளங்கோவன். விசாரணைக்குப் பிறகு இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்கப் படும் என எதிர்பார்க்கப் படுகிறது.