சுரங்க ஒதுக்கீடு வழக்கு: நிலக்கரி துறை முன்னாள் செயலாளருக்கு சம்மன் அனுப்ப சி.பி.ஐ. கோர்ட் உத்தரவு!
நிலக்கரி ஒதுக்கீட்டில் நிகழ்ந்த முறைகேடு தொடர்பான வழக்குகளில், மத்திய பிரதேசத்தை சேர்ந்த கமல் ஸ்பாஞ்ஜ் ஸ்டீல் அண்டு பவர் லிமிடெட் என்னும் நிறுவனத்துக்கு சுரங்கம் ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேடு பற்றிய வழக்கும் ஒன்றாகும்.
இந்த வழக்கில் நிலக்கரி துறை முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தா, நிலக்கரி அமைச்சகத்தின் அப்போதைய இணை செயலாளர் கே.எஸ்.குரோபா, நிலக்கரி ஒதுக்கீட்டு பிரிவின் இயக்குனர் கே.சி.சமரியா, கமல் ஸ்பாஞ்ச் ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பவன் குமார் அலுவாலியா, ஆடிட்டர் அமித் கோயல் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நிலக்கரி ஒதுக்கீடு தொடர்பான சரியான உண்மைகளை மறைத்ததாகவும் நிலக்கரி சுரங்கங்களின் மதிப்பீடு தொடர்பாக தவறான தகவல்களை அளித்ததாகவும் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நடைபெற்று வரும் சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் இது தொடர்பான விசாரணையை முடித்துக் கொள்வதாகக் கூறப்பட்டிருந்தது.
இதை ஏற்க மறுத்த நீதிபதி பாரத் பராசர் இந்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் அவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் நிலக்கரி துறை முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தா உள்பட 5 பேருக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். அவர்களை அடுத்த விசாரணை தேதியான 31-ந் தேதி ஆஜராகுமாறு உத்தரவிட்டார். இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை 31-ந் தேதிக்குள் தயார் செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ. விசாரணை அதிகாரிக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.