8 ஆண்டுகளுக்கு முன் உறைய வைக்கப்பட்ட கருமுட்டை மூலம் "தேவதை"க்கு தாயான முன்னாள் உலக அழகி!
மும்பை: 8 ஆண்டுகளாக உறைய வைக்கப்பட்ட கருமுட்டை மூலம் தற்போது ஒரு குழந்தைக்கு தாயாகியாகியுள்ளார் முன்னாள் உலக அழகியும், இந்திய அழகியுமான டயானா ஹைடன்.
கடந்த 1992ம் ஆண்டு இந்திய அழகியாக பட்டம் வென்றவர் டயானா ஹைடன். அதனைத் தொடர்ந்து உலக அழகி பட்டத்தையும் அவர் வென்றார்.
தொடர்ந்து பரபரப்பாக இயங்கி வந்ததால், 2007ம் ஆண்டு தனது கருமுட்டைகளை மும்பை மருத்துவமனையில் சேகரித்து உறை நிலையில் வைத்தார் டயானா. மொத்தம் தனது 16 கருமுட்டைகளை அப்போது அவர் சேமித்து வைத்தார். அப்போது அவருக்கு வயது 32.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தனது 40வது வயதில் அமெரிக்காவைச் சேர்ந்த கொலிண்டிக் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார் டயானா. அதன்பிறகு நடந்த மருத்துவ பரிசோதனையில் டயானாவிற்கு எண்டோ மெட்டிராசிஸ் என்ற நோய் இருப்பது தெரியவந்தது.
இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களின் கருப்பையில் இருந்து தரமான முதிர்ச்சியுற்ற கருமுட்டைகளை உருவாக்க முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் டயானாவிற்கு குழந்தைப்பேறு வாய்ப்பு இல்லாத நிலை ஏற்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து டயானா கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் சேகரித்து வைத்த கருமுட்டைகளைப் பயன்படுத்தி, செயற்கை முறையில் அவரைக் கருத்தரிக்க வைத்தனர்.
தற்போது டயானாவிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு ஆர்யா ஹைடன் என டயானா பெயரிட்டுள்ளார். குழந்தை 3.7 கிலோ எடையுடனும், 55 செ.மீட்டர் நீளமாகவும் ஆரோக்கியத்துடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.