'இ-வேஸ்ட்'களால் குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சிக் குறைபாடு, புற்றுநோய்
டெல்லி: உலகில் இ- வேஸ்ட் எனப்படும் மிண்ணனு கழிவுகளின் தொடர் பாதிப்புகள் காரணமாக கருச்சிதைவு, குழந்தைகளுக்கு மூளை வளர்ச்சிக் குறைபாடு, புற்றுநோய் போன்ற பேராபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
உலகிலேயே அதிக அளவு கைப்பேசிகள் பயன்பாடு உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனா முதலிடத்தில் உள்ளது. அடுத்த 5 அல்லது 10 ஆண்டுகளில் இந்தியா முதலிடத்துக்கு வந்துவிடும் என்கின்றது புள்ளி விவரம்.
அண்மையில் வெளியிடப்பட்ட புள்ளி விவரப்படி 134 கோடியே 95 லட்சத்து 85 ஆயிரத்து 838 மக்கள் தொகையைக் கொண்ட சீனாவில் 122 கோடியே 73 லட்சத்து, 60 ஆயிரம் பேர் கைப்பேசி வைத்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக 126 கோடியே 20 லட்சத்து 90 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்டுள்ள இந்தியாவில் 92 கோடியே 43 லட்சத்து 187 ஆயிரத்து 927 பேர் கைப்பேசி வைத்துள்ளனர்.
மூன்றாவது இடத்தில் அமெரிக்கா, அடுத்ததாக பிரேசில், ஐந்தாவது இடத்தில் ரஷியா ஆகியவை உள்ளன.
இவ்வாறு கைப்பேசிகளையும், பிற மின்னணு சாதனப் பொருள்களையும் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய பொருள்கள் சந்தையில் அறிமுகமாகின்றபோது, பழையவற்றை தூக்கி எறிந்துவிட்டு புதியதை வாங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
இதன் காரணமாக, ஆண்டுக்கு ஆண்டு பல லட்சம் டன் மின்னணு சாதனக் கழிவுகள் இந்தியாவில் உருவாவதோடு, பிற நாடுகளின் மின்னணு சாதனங்களின் கழிவுகளும் இந்தியாவில் கொட்டப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சியாளரும், தொழில் நிறுவன கழிவு மேலாண்மை சங்க நிர்வாகியுமான சங்கர் காங்கீவரம் கூறியபோது, "கணிணிகள், மடிக் கணிணிகள், கைப்பேசிகள், தொலைபேசிகள், சிடி பிளேயர், பிரின்ட்டர்கள், மின்னணு பொம்மைகள், கேமராக்கள், மைக்ரோவேவ் அடுப்பு ஆகியவைதான் பேராபத்தை ஏற்படுத்தும் மின்னணு சாதனக் கழிவுகள் பட்டியலில் இடம்பெறுகின்றன.
அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இந்த மின்னணு சாதனக் கழிவுகள் மக்களுக்கு பாதிப்பின்றி அப்புறப்படுத்துவது முறையாக பின்பற்றப்படுகின்றன.
அதாவது, அந்தப் பொருள்களை தயாரித்து வழங்கும் நிறுவனங்களே, பொருள்கள் பயன்படா நிலையை எட்டும்போது திரும்பப் பெற்றுக்கொள்கின்றன. இதற்காக பொருள்களின் பின்பக்கத்தில் அதற்கான அறிவிப்பையும், தொடர்பு எண்ணையும் குறிப்பிடுகின்றன.
ஆனால், இந்தியாவில் மின்னணு சாதனப் பொருள்களைத் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் அக்கழிவுகளை திரும்பப் பெறுவதில்லை. இதனால், ஆயிரக்கணக்கான டன் மின்னணு சாதனக் கழிவுகள் இந்தியாவில் குவிந்து கிடக்கின்றன.
அதுமட்டுமன்றி, இந்தியாவில் மின்னணு மறுசுழற்சி நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் வளர்ந்த நாடுகள் பல ஆயிரம் டன் மின்னணு சாதனக் கழிவுகளை இந்தியாவில் கொட்டி வருகின்றன.
இதை அறிந்து விழித்துக்கொண்ட இந்திய அரசு, மின்னணு சாதனக் கழிவு மேலாண்மை, கையாளுதல் சட்டத்தை கடந்த 2011 இல் வடிவமைத்து 2012 மே மாதத்தில் நடைமுறைக்கு கொண்டுவந்தது.
ஆனால், 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வு அறிக்கையின்படி 2013-14 ஆம் ஆண்டில் இந்தியாவில் 5 லட்சம் டன் முதல் 6 லட்சம் டன் மின்னணு சாதனக் கழிவுகள் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிக அளவில் இயங்கி வரும் அனுமதி பெறாத மறுசுழற்சியாளர்கள் மின்னணு சாதனக் கழிவுகளை முறையாகக் கையாளுவதில்லை. எனவே, அறிமுகம் செய்துள்ள சட்டத்தை மேலும் வலுவானதாக மாற்ற வேண்டும் என்பதே நிபுணர்களின் கருத்து என்றார்.
மின்னணு சாதனக் கழிவுகளை அதிக அளவில் உருவாக்கும் முதல் 10 பெரு நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் மும்பையும், அடுத்ததாக டெல்லி, பெங்களூரு நகரங்களும் 4 ஆவது இடத்தில் சென்னையும் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.