கத்தாரில் இருந்து இந்தியர்களை அழைத்துவர இன்று முதல் கூடுதல் விமான சேவைகள் இயக்கம்!
கத்தாரில் இருந்து இந்தியர்களை தாயகத்துக்கு அழைத்து வர கூடுதல் விமான சேவைகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.
டெல்லி: கத்தாரில் இருந்து இந்தியர்களை தாயகத்துக்கு அழைத்து வர இன்று முதல் கூடுதல் விமான சேவைகள் இயக்கப்பட உள்ளன.
தீவிரவாதத்துக்கு கத்தார் உதவுவதாக கூறி அந்நாட்டுனான உறவுகளை செளதி உள்ளிட்ட அரபு நாடுகள் முறித்து கொண்டன. இதனால் அங்கு வாழும் இந்தியர்கள் நிலை கேள்விக்குறியானது.
இதனைத் தொடர்ந்து கத்தாரில் இருந்து வெளியேற விரும்பும் இந்தியர்களுக்கு உதவ கூடுதல் விமான சேவைகளை இயக்க வேண்டும் என்று விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜூவிடம் வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கேட்டுக் கொண்டிருந்தார். இதனடிப்படையில் இன்று முதல் கத்தாருக்கு கூடுதம் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
கத்தாரில் கேரளா மாநிலத்தவர் பெருமளவில் பணிபுரிவதால் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஜூன் 25 முதல் ஜூலை 8-ந் தேதி வரை திருவனந்தபுரம்- தோஹா, தோஹா- கொச்சின், கொச்சின் - திருவனந்தபுரம் இடையே 186 இருக்கைகளுடன் கூடிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் இயக்கப்படும்.
இன்றும் நாளையும் 168 இருக்கைகளுடன் கூடிய ஜெட் ஏர்வேஸ் விமானங்கள் மும்பை- தோஹா- மும்பை வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது.