சுப்பிரமணியன் சுவாமி பேஸ்புக் பக்கம் நீக்கம்.. போலி பக்கத்தை நீக்குவதற்கு பதிலாக தவறிழைத்த பேஸ்புக்!
டெல்லி: பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமிக்கு என்ன கெட்ட நேரமோ தெரியவில்லை, அவர் ஒரு வேண்டுகோள்விடுத்தால் நடந்தது மற்றொன்றாக இருந்துள்ளது.
பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி சமூக வலைத்தளங்களில் மிகுந்த ஆதிக்கம் செலுத்திவருகிறார். டிவிட்டர் அல்லது பேஸ்புக் என எந்த ஒரு சமூக ஊடகமாக இருந்தாலும் அவரை பின்தொடர்பவர்கள் அதிகம் உள்ளனர். பேஸ்புக்கில் சுமார் 10 லட்சம் பேர் இவரை பாலோ செய்கின்றனர்.
இந்த ஊடகங்கள் வாயிலாக இந்துத்துவா கருத்துக்களை அவர் கூறிவருகிறார். இந்து மதமே முதலில் தோன்றியது என்ற அவரது கருத்தை கிண்டல் செய்வதற்காக யாரோ மர்ம நபர், சுப்பிரமணிய'ம்' சுவாமி என்ற பெயரில் ஒரு போலி பேஸ்புக் ஐடியை உருவாக்கியுள்ளார். அதையும் 19 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.
இந்த போலி பேஸ்புக் ஐடியில், சுப்பிரமணியன்சுவாமியின் கொள்கைகளை கிண்டல் செய்யும் விதமாக போஸ்ட் போடப்பட்டு வருகிறது. உதாரணத்துக்கு, நோபல் பரிசு பெற்ற மலாலா பாகிஸ்தானை சேர்ந்தவராக இருந்தாலும்கூட, அவரும் அடிப்படையில் இந்துதான் என்பது போன்ற பதிவுகள் அதில் போடப்பட்டுள்ளன. போலி பேஸ்புக்கில் போடப்பட்டுள்ள மலாலா போட்டோவில் அவரின் நெற்றியில் குங்குமமும் வைக்கப்பட்டுள்ளது.
சில அரசியல் பிரபலங்கள் கூட அந்த போலி ஐடியை பார்த்துவிட்டு அது சுப்பிரமணியன்சுவாமியின் கருத்துக்கள்தான் என்று நினைத்து ஷேர் செய்துள்ளதையும் பார்க்க முடிந்தது.
இதுபோன்ற விஷம பிரச்சாரம் எப்படியோ சுப்பிரமணியன் சுவாமி காதுக்கு சென்று சேர்ந்துள்ளது. எனவே இதுபோன்ற போலி பேஸ்புக் ஐடிகளை நீக்காவிட்டால், பேஸ்புக் சட்ட பிரச்சினையை சந்திக்க வேண்டிவரும் என்று தனது டிவிட்டர் தளத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். இதைப்பார்த்த பேஸ்புக் குரூப், ஐடியை நீக்கியுள்ளது. ஆனால் துரதிருஷ்டவசமாக சுப்பிரமணியன்சுவாமியின் ஒரிஜினல் பேஸ்புக் ஐடியை அது நீக்கிவிட்டது.
அதே நேரம் போலி ஐடி அப்படியே தொடருகிறது. பெயர் குழப்பத்தால் பேஸ்புக்கும் இந்த தவறை செய்துவிட்டது என்று கூறப்படுகிறது.