“எந்த அடிப்படையில் சஞ்சய் தத்துக்கு தொடர் பரோல்?” – விசாரணைக்கு மகாரஷ்டிரா அரசு உத்தரவு
மும்பை: மும்பை குண்டு வெடிப்பு வழக்கு தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள சஞ்சய் தத்துக்கு பரோல் வழங்கப்படும் விவகாரம் குறித்து விசாரணை நடத்த மகாராஷ்டிரா அரசு உத்தரவிட்டுள்ளது.
மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சட்ட விரோத ஆயுதச் சட்டத்தின் கீழ் குற்றவாளி என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட சஞ்சய் தத்துக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள எரவாடா மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இதனிடையே, அவருக்கு கடந்த புதன்கிழமை 14 நாள்கள் பரோல் வழங்கப்பட்டது.
இதற்கு முன்பு கடந்த 2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28 நாள்களும், டிசம்பர் மாதம் 28 நாள்களும் அவருக்கு பரோல் வழங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போதும் அவருக்கு பரோல் வழங்கப்பட்டிருப்பதற்கு பல்வேறு அமைப்புகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றன. இதனைத் தொடர்ந்து, சஞ்சய் தத்துக்கு பரோல் வழங்கப்படும் விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த மகாராஷ்டிர அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநில உள்துறை அமைச்சர் ராம் ஷிண்டே, "எரவாடா சிறையில் மொத்தம் 5 பேர் பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் சஞ்சய் தத்துக்கு மட்டும் தொடர்ச்சியாக பரோல் வழங்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. எந்தச் சட்டத்தின்படி அவருக்கு பரோல் வழங்கப்படுகிறது என்பது தெளிவுப்படுத்தப்பட வேண்டும்.
ஒரு குறிப்பிட்ட நபருக்கு மட்டும் அடிக்கடி பரோல் வழங்குவது சாத்தியமானால், அது மற்ற சிறைக் கைதிகளுக்கும் அமல்படுத்தப்பட்டிருக்க வேண்டும். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு புனே சிறைத்துறை டி.ஐ.ஜியிடம் கேட்டுள்ளேன்" என்றார் அவர்.
இதனிடையே சஞ்சய் தத் பரோல் விவகாரத்தில் மட்டுமின்றி மாநிலத்தின் சிறை நிர்வாகம் முழுவதையும் ஆய்வு செய்வது அவசியம் என சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளது.