மகாராஷ்டிர புதிய அரசு பதவியேற்பு விழாவை புறக்கணிக்க போவதாக கூறிய சிவசேனா திடீர் ஆஜர்
மும்பை: மகாராஷ்டிராவில் இன்று பாஜக தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற நிலையில், பதவியேற்பு விழாவுக்கு வரமாட்டோம் என்று கூறியிருந்த சிவசேனா கட்சியினர் திடீர் விஜயம் செய்து ஆச்சரியம் ஏற்படுத்தினர்.
பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் மகாராஷ்டிராவின் 27வது முதல்வராக இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருடன் அமைச்சர்களும் பதவியேற்றனர்.
மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா, அத்வானி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். நடிகர், நடிகைகளும் பங்கேற்றனர்.
இதுகுறித்து சிவசேனா எம்.பி. வினாயக் ரவுட் நேற்று கூறுகையில், பாஜகவின் அரசில் அங்கம் வகித்தால் மட்டுமே எங்கள் கட்சி எம்.எல்,ஏக்களுக்கு மதிப்பு கிடைக்கும். அப்போதுதான் நாங்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்போம். அல்லது, பதவிேயற்க மாட்டோம் என்றார்.
மேலும் அவர் கூறுகையில், பாஜக நமக்கு மரியாதை தராதபோது நாம் எதற்காக அவர்கள் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என்று அனைத்து எம்.எல்.ஏக்களும் கேள்வி எழுப்புகின்றனர் என்றார்.
பாஜகவை பொறுத்தளவில் நவம்பரில் சட்டசபையை கூட்டி பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கும்போது பிற கட்சிகளின் தயவை தேடிக்கொள்ளலாம். அதுவரை சொந்த பலத்தில் மைனாரிட்டியாக ஆட்சியமைக்கலாம் என்றே விரும்புவதாக தெரிகிறது. எனவேதான் இன்று பதவியேற்பை நடத்தியது.
ஆனால் வரமாட்டோம் என்று சொன்ன சிவசேனா கட்சியினர் இன்று பதவியேற்பு விழாவில் பங்கேற்று ஆச்சரியம் ஏற்படுத்தினர். சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே விழாவில் பங்கேற்றார். அதேபோல பாஜகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளிப்பதாக கூறியுள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் யாதவும் விழாவில் பங்கேற்றார்.