மத்திய பட்ஜெட் 2015: விவசாயிகளுக்கு கடனுதவிகளை மட்டும் அறிவித்து ”எஸ்கேப்” ஆன மத்திய அரசு
டெல்லி: இந்தியாவின் 67 ஆவது மத்திய பட்ஜெட் - 2015 நாடாளுமன்றத்தில் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜெட்லியால் தாக்கல் செய்யப்பட்டு முடிவடைந்த நிலையில் அதில் 2015 ஆம் ஆண்டிற்கான விவசாயிகள் நலன் திட்டங்களாக பட்டியலிட்டப்பட்டவை குறைந்த அளவே.
புதிய திட்டங்களும், மானியங்களும் விவசாயிகளுக்கு சாதகமாக அமைந்தாலும், அவர்களுடைய கோரிக்கைகளையும், எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்கின்ற ஒன்றாக அமையவில்லை என்பதே உண்மை.
மத்திய பட்ஜெட்டில் விவசாயிகள் நலனுக்கான அறிவிப்புகள்:
இப்பட்ஜெட் முக்கியமாக பெண்கள், குழந்தைகள், விவசாயிகள் நலனைக் கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
விவசாய மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூபாய் 3,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
ஊரக மேம்பாட்டிற்கான மொத்த கடனுதவியாக நபார்டு வங்கிகளுக்கு ரூபாய் 25,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
2015-16 நிதியாண்டில் விவசாயிகளுக்கு ரூபாய் 8.5 லட்சம் கோடி கடனுதவி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கும் வகையில் அரசினால் ஒருங்கிணைந்த தேசிய வேளாண் சந்தை உருவாக்கப்படும்.
சிறு, குறு விவசாயிகளின் நலனுக்காகவும், அவர்களுடைய பயிர் வேளாண்மைக்காகவும் ரூபாய் 15,000 கோடி கடன் உதவி நபார்டு வங்கியின் மூலமாக அளிக்கப்படும்.
சிறுபாசன திட்டங்களுக்காக ரூபாய் 5,300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
விவசாயிகளுக்கான பட்ஜெட் என்று தெரிவிக்கப்பட்டிருந்தாலும் கடனுதவி குறித்த அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.