மைசூரில் தமிழ்த் திரைப்பட போஸ்டரை கிழித்து எரித்து கன்னட விவசாயிகள் போராட்டம்!
மைசூர்: தமிழகத்துக்கு காவிரி நீரை திறந்துவிடக் கூடாது என வலியுறுத்தி மைசூரில் கன்னட விவசாயிகள் இன்று போராட்டம் நடத்தினர். அப்போது தமிழ்த் திரைப்பட போஸ்டர்களை அவர்கள் கிழித்து எரித்தனர்.
காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரை திறந்துவிட வலியுறுத்தி இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றது. மேலும் பல இடங்களில் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.
இப்போராட்டங்களுக்கு எதிராக மைசூரில் கன்னட விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். மைசூர் அக்ரஹாரா சர்க்கிளில் உள்ள பத்மா தியேட்டரில் தமிழ்த் திரைப்படம் பயம் ஒரு பயணம் ஓடிக்கொண்டிருந்தது.
அப்போது அங்கு வந்த ஆர்பாட்டக்காரர்கள் திரைப்படத்தின் போஸ்டரைக் கிழித்து எரித்தனர். தியேட்டருக்குள் நுழைந்து படம் பார்த்தவர்களை விரட்டி அடித்தனர்.
பின்னர் தமிழகத்துக்கு காவிரி நீர் திறந்து விடுவதை எதிர்த்து கடுமையாக முழக்கங்களை எழுப்பி ஆர்பாட்டத்திலும் அவர்கள் ஈடுபட்டனர்.