துப்பு கொடுப்பதில் வல்லவரா நீங்க?: உங்களை தான் தேடுகிறது உளவுத் துறை
டெல்லி: இந்திய உளவுத் துறையில் ஆள் பற்றாக்குறையாக இருப்பது பெரும் தலைவலியாக உள்ளது.
இந்திய உளவுத் துறையில் 8 ஆயிரத்து 600 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆட்கள் குறைவாக இருப்பதால் தீவிரவாத பிரச்சனையை தீர்ப்பதில் உளவுத் துறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் சர்ச்சைக்குரிய பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் தகவல் பெற்று செயல்பட வேண்டிய நிலையில் உளவுத் துறை உள்ளது.
காலி பணியிடங்களை நிரப்ப உளவுத் துறை அனைத்து முயற்சியும் செய்து வருகிறது. உளவுத் துறையில் ஆட்கள் பற்றாக்குறையாக இருப்பதால் அவர்களை விட தீவிரவாதிகளுக்கு விரைவில் தகவல் கிடைக்கும் நிலை உள்ளது. இதற்கு சிறந்த உதாரணம் மணிப்பூர் தாக்குதல் ஆகும்.
இன்பார்மர்கள்
தகவல்களை பெற உள்ளூர்களில் உள்ள இன்பார்மர்களின் உதவியை நாடுகிறது உளவுத் துறை. தற்போது தகவல் அளிக்கும் இன்பார்மர்கள் பணத்திற்காக பணியாற்றுகிறார்கள். அவர்களை நம்ப முடியாது. ஏனென்றால் எதிரிகள் அதிக பணம் கொடுத்தால் அவர்கள் பக்கம் சாய்ந்துவிடுவார்கள் என உளவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
உளவுத் துறை
ஆள் பற்றாக்குறையாக இருக்கும் இந்த நேரத்தில் கடந்த 2 மாதங்களாக பலர் உளவுத் துறையில் சேர முன்வந்துள்ளனர். எம்.பி.ஏ. பட்டதாரிகள் பலர் அதிக சம்பளம் கிடைக்கும் வேலையை விட்டுவிட்டு உளவுத் துறையில் சேர வந்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்கள்
வட கிழக்கு மாநிலங்களை கண்காணிப்பது தான் உளவுத் துறையின் முக்கிய பிரச்சனையாக உள்ளது. அந்த மாநில மக்களின் ஆதரவு அவ்வளவாக உளவுத் துறைக்கு கிடைக்கவில்லை. இதனால் பல நேரம் தீவிரவாதிகளுக்கு தகவல் முதலில் கிடைத்துவிடுகிறது. மொழிப் பிரச்சனை இருப்பதால் வடகிழக்கு மாநிலங்களில் உளவுத் துறைக்கு உள்ளூர் மக்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
நாகாலாந்து
நாகாலாந்து மற்றும் மணிபூரில் தீவிரவாத தாக்குதல்கள் அதிகம் நடக்கிறது. அந்த மாநிலங்களில் உள்ள மக்களின் ஆதரவை தீவிரவாத அமைப்புகள் பெற்றுள்ளன. இதனால் படித்த உள்ளூர் நபர்களை வைத்து மீதமுள்ளவர்களுக்கு நிலைமையை எடுத்துக் கூறும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது உளவுத் துறை. நாகாலாந்தில் 15 படித்த நபர்களை பணியமர்த்தியுள்ளது உளவுத் துறை.
ஐஎஸ்ஐஎஸ் அச்சுறுத்தல்
ஐஎஸ்ஐஎஸ், அல் கொய்தா ஆகிய தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகள் வெற்றிகரமாக அமைந்துள்ளன. அந்த 2 தீவிரவாத அமைப்புகளில் யாராவது இந்தியர்கள் சேர்கிறார்களா என்பதை கண்காணிக்க உளவுத் துறை தனிக் குழு ஒன்றை அமைத்துள்ளது.
சைபர் ராணுவம்
ஆன்லைனில் ஏதாவது சந்தேகத்திற்குரிய முறையில் நடந்தால் அதை தெரிவிக்க பொதுமக்கள் அடங்கிய சைபர் ராணுவத்தை அமைக்க உளவுத் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக தொழில்நுட்பம் பற்றி நன்கு அறிந்த நபர்கள் வேலைக்கு எடுக்கப்பட உள்ளனர்.
ஆட்கள்
உளவுத் துறையில் 27 ஆயிரம் பேரை பணிக்கு வைக்க அனுமதி உள்ளது. ஆனால் தற்போது உளவுத் துறையில் 18 ஆயிரத்து 795 பேர் தான் உள்ளனர். 30 சதவீதம் ஆட்கள் பற்றாக்குறையாக உள்ளது.