பண பலத்தால் திலீப் தப்பிக்கலாம்.. பிரபல இயக்குநர் பகீர் பேட்டி
நடிகர் திலீப் மீதான கடத்தல் வழக்கின் இறுதி முடிவு பணபலத்தையும்,வாதாடும் வழக்குரைஞர்களையும் பொருத்தே அமையும் என்று மலையாள இயக்குநர் ஜாய் மேத்யூ தெரிவித்தார்.
திருவனந்தபுரம்: நடிகை பாவனா கடத்தல் வழக்கில் நடிகர் திலீப் தண்டிக்கப்படுவாரா என்பது அவரது பணபலத்தையும், வாதாடும் வழக்குரைஞர்களையும் பொருத்தே அமையும் என்று இயக்குநர் ஜாய் மேத்யூ சுளீரென தெரிவித்துள்ளார்.
பிரபல திரைப்பட நடிகையான பாவனா கடந்த பிப்ரவரி மாதம் கேரளாவில் கடத்தப்பட்டு ஓடும் காரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த வழக்கில் பல்சர் சுனில் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் திலீப்புக்கு எதிராக ஆதாரங்களை இருப்பதைத் தொடர்ந்து அவர் நேற்று முந்தைய தினம் கைது செய்யப்பட்டார். அவரை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பணபலமே பேசும்
நடிகர் திலீப் மீதான கடத்தல் வழக்கின் இறுதி முடிவு பணபலத்தையும், வாதாடும் வழக்குரைஞர்களையும் பொருத்தே அமையும் என்று மலையாள இயக்குநர் ஜாய் மேத்யூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பாவனா கடத்தல் விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என்று முதல்வர் பினராயி விஜயன் மீது நம்பிக்கை இருந்தது.
நம்பிக்கை குறைந்துவிட்டது
எப்போது அவர் பாவனா கடத்தல் விவகாரத்தில் எந்த வித சதியும் இல்லை என்று கூறினாரோ அப்போதே எனது நம்பிக்கை குறைந்துவிட்டது. பாவனா கடத்தல் விவகாரத்தை மீடியாக்கள்தான் உயிர்ப்புடன் வைத்திருந்தன என்று நான் கருதுகிறேன்.
ஊடகங்களால்தான்
நம் நாட்டின் 4-ஆவது தூணான செய்தி மற்றும் ஊடகங்களின் சக்தியை இப்போதுதான் நாம் காண்கிறோம். ஊடகங்கள் தொடர்ந்து பாவனா கடத்தல் செய்தியை போட்டு வந்ததால்தான் சம்பவம் நிகழ்ந்து 5 மாதங்கள் கழிந்த பிறகும் போலீஸார் அந்த வழக்கை குழித்தோண்டி புதைக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் மீது பரிதாப நிலை
சாமானிய மக்கள் எப்போதும் பாதிக்கப்பட்டவர்கள் மீது பரிதாப நிலையை கொண்டிருப்பர். அதேயே ஊடகங்களும் பிரதிபலிக்கின்றன. தங்கள் மகளுக்கு இதுபோன்று நேர்ந்த நிலையில் பரிதாபத்தை எந்த பெற்றோரும் விரும்பமாட்டார்கள்.
இறுதி முடிவு
நடிகர் திலிப் மீதான கடத்தல் வழக்கின் இறுதி முடிவு பணபலத்தையும், வாதாடும் வழக்குரைஞர்களையும் பொருத்தே அமையும். திலீப்புக்கு வாதாடும் வழக்குரைஞர் ராம்குமார், ராஜன் வழக்கில் கருணாகரனுக்கு எதிராக போராடியவர். ஐஸ் கிரீம் பார்லர் வழக்கு, விதுரா வழக்கு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர், ஆனால் தண்டனை கிடைத்ததா என்றால் இல்லை. மாறாக, பாதிக்கப்பட்டவர்களே நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது.
பாவனாவுக்கு ஆதரவு
தற்போது பாவனாவுக்கு தார்மீக முறையில் ஆதரவு அளிப்பது நம் கடமை. 'அம்மா' சங்கம் செயற்குழு உறுப்பினர்களை கூட்டாமல் உடனடியாக பொதுக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும். அம்மா சங்கத்தின் தலைவர் ராஜினாமா செய்தால் அடுத்த தலைவரை பொதுக் குழு உறுப்பினர்களே தேர்வு செய்ய வேண்டுமே தவிர, செயற்குழு உறுப்பினர்கள் அல்ல என்றார் மேத்யூ.