25 ரூபாய் நோட்டு வெளியிடும் பிரதமர் மோடியின் விருப்பம்... நிராகரித்தது மத்திய நிதி அமைச்சகம்
டெல்லி : 25 ரூபாய் நோட்டு வெளியிட வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பத்தை மத்திய நிதி அமைச்சகம் நிராகரித்து விட்டது தெரிய வந்துள்ளது.
ஐந்து ரூபாய் நாணயத்தின் தட்டுப்பாட்டை சமாளிக்க, இருபத்தி ஐந்து ரூபாய் நோட்டை வெளியிடலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி முன்பு வானொலியில் ‘மனதோடு பேசுகிறேன்' நிகழ்ச்சியில் தெரிவித்தார்.
இதன் மீது தகவல் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்ட கேள்வியில் பிரதமரின் இந்த கருத்தை மத்திய அரசின் நிதி அமைச்சகம் நிராகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
இது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், மத்திய நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையின் ரூபாய் மற்றும் நாணயப் பிரிவிடம் சுபாஷ் சந்திர அகர்வால் என்பவர் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு கடந்த 14.08.2015 அன்று கிடைத்த பதில் கடிதத்தில் இருபத்தி ஐந்து ரூபாய் நோட்டு வெளியிடும் உத்தேசம் எதுவுமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமை ஆர்வலரான அகர்வால், கடந்த 17.01.2015 அன்று இந்த கேள்வியை எழுப்பி இருந்தார். அதற்கான பதிலில், பிரதமரின் இந்த ஆலோசனை 1957 ஆம் ஆண்டு இந்திய அரசு அறிமுகப்படுத்திய மெட்ரிக் அளவு முறைக்கு எதிரானது என்றும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.