ஜனவரி- டிசம்பர் புதிய நிதியாண்டு முறை... 2018 முதல் மாற்றம்... மத்திய அரசு அதிரடி
அடுத்த ஆண்டு முதல் நிதியாண்டை, ஏப்ரல் மாதத்துக்கு பதில் ஜனவரிக்கு மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
டெல்லி: வரும் 2018 முதல் நிதியாண்டை ஜனவரி முதல் டிசம்பருக்கு மாற்றி, புதிய நடைமுறையை கொண்டுவர மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்ததையடுத்து நிதியாண்டை மாற்றுவதற்கு தேவையான பணிகளை மத்திய அரசு செய்து வருவதாகக் கூறப்படுகிறது. அவ்வாறு நிதியாண்டு ஜனவரிக்கு மாற்றப்பட்டால், இந்த ஆண்டு நவம்பர் மாதமே அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படலாம் என அரசுத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு வரை பிப்ரவரி மாத கடைசி வாரத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த இந்த நடைமுறையை மத்திய அரசு இந்த ஆண்டு மாற்றியது. இதன்படி கடந்த பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இனி நவம்பர் மாதமே பட்ஜெட்
நிதியாண்டை மாற்றுவது தொடர்பான சட்ட வரைவு குறித்து தற்போது ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரை டிசம்பர் மாதத்துக்கு முன்பு முடிப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
150 ஆண்டுகால வழக்கம்
இப்போது ஏப்ரல் 1-ம் தேதி முதல் மார்ச் 31-ம் தேதி வரை நிதியாண்டு கணக்கிடப்படுகிறது. இந்த நடைமுறை ஆங்கிலேயர் ஆட்சி காலமான 1867-ம் ஆண்டிலிருந்து வழக்கத்தில் இருந்து வருகிறது.
நிதி ஆயோக் கருத்து
இதுபோல நிதியாண்டை மாற்றுவது அவசியம் என நிதி ஆயோக் அமைப்பும் தெரிவித்துள்ளது. இப்போது நிதியாண்டு கணக்கு நடை முறையால் வேலைச் சூழலை குறைந்த அளவே பயன்படுத்திக் கொள்ள முடிகிறது.
திட்டங்கள் நிறைவேற்ற மாற்றம்
இதுகுறித்து பிரதமர் மோடி "கால நிர்வாகம் மோசமாக இருப்பதன் காரணமாக பல நல்ல திட்டங்களை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் அந்த திட்டங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி அடைவதில்லை" என்று ஏற்கெனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னோடியான மத்திய பிரதேசம்
நம் நாட்டிலேயே முதன் முறையாக, மத்தியபிரதேச மாநிலம் ஜனவரி முதல் டிசம்பர் வரை என நிதியாண்டை ஏற்கெனவே மாற்றியிருக்கிறது. இது அம்மாநிலத்தில் 2018-ம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.
நிதியாண்டை மாற்றிய உலக நாடுகள்
ஆஸ்திரியா, பிரேசில், சீனா, ஜெர்மனி, கிரீஸ், இஸ்ரேல், நெதர்லாந்து, போர்ச்சுகல், ரஷ்யா, தென் கொரியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, தைவான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31 வரை நிதி ஆண்டு கணக்கிடப்படுகிறது.