ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு.. டிடிவி தினகரனுக்கு எதிராக இறுகும் பிடி
தினகரன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள, லஞ்ச தடுப்பு சட்டத்தின் 8வது பிரிவுப்படி, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, அவர்களுக்கு கையூட்டு கொடுக்க முயல்வோருக்கு குறைந்தபட்சம் 6 மாதமும், அதிகபட்சம் 5
டெல்லி: தேர்தல் கமிஷன் அதிகாரிகளிடம் பேசி, அதிமுக கட்சி சின்னத்தை பெற்றுத் தருவதற்காக கூறி அதிமுக அம்மா கட்சி துணை பொதுச்செயலாளர், டிடிவி தினகரனிடம் பணம் பெற்றதாக டெல்லியில் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்து டெல்லி காவல்துறை துணை கமிஷனர் மதுர் வர்மா இன்று நிருபர்களிடம் பேசுகையில், தேர்தல் ஆணையத்தில் தனது செல்வாக்கை பயன்படுத்தி கட்சிக்கு சின்னம் வாங்கித் தருவதாக கூறி பணம் பெற்றதாக சுகேஷ் சந்திரசேகர் என்பவரை கைது செய்துள்ளோம்.
கைதானவரிடம் இருந்து 1.30 கோடி கைப்பற்றியுள்ளோம். மேலும், 2 ஆடம்பர கார்களை பறிமுதல் செய்துள்ளோம். லஞ்ச தடுப்பு சட்டத்தின், 8வது பிரிவு, ஐபிசி சட்டத்தின் பிரிவுகள், 170, 120பி ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம் என்றார். இந்த எப்.ஐ.ஆரில் டிடிவி தினகரன் பெயரும் இடம் பெற்றுள்ளது. இவ்வாறு துணை கமிஷனர் மதுர் வர்மா தெரிவித்தார்.
டெல்லி போலீஸ்
தினகரன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் வலுவானவை என்பதால் நாளை டெல்லியிலிருந்து போலீஸ் குழு வந்து சென்னையில் தினகரனிடம் விசாரணை நடத்தும். தேவை ஏற்பட்டால் கைது செய்யும் வாயப்பு உருவாகியுள்ளது.
லஞ்ச தடுப்பு
தினகரன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள, லஞ்ச தடுப்பு சட்டத்தின் 8வது பிரிவுப்படி, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து, அவர்களுக்கு கையூட்டு கொடுக்க முயல்வோருக்கு குறைந்தபட்சம் 6 மாதமும், அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரையிலும் சிறை தண்டனை விதிக்க முடியும். அபராதமும் விதிக்க முடியும்.
மோசடி
இந்திய தண்டனை சட்டம் பிரிவு 170ன்கீழ், வழக்குப்பதிவு செய்ய காரணம், மோசடி, ஏமாற்று போன்றவைக்காக ஆகும். இப்படி ஏமாற்றுவோருக்கு இந்த சட்டப்பிரிவின்கீழ் 2 வருட சிறை தண்டனை வழங்க முடியும். அபராதமும் வழங்க முடியும்.
ஜாமீனில் வெளிவர முடியாது
இந்திய தண்டனை சட்டம் 120பி-ன்கீழ் தினகரன், சுகேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பிரிவு கூட்டு சதிக்கு எதிரானதாகும். ஆறு மாதம் வரையிலும், அபராதமும் விதிக்க இந்த சட்டம் வகை செய்கிறது. ஜாமீனில் வெளி வர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் தினகரன் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதனால் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.