ஆந்திராவில் பட்டாசு ஆலை விபத்து – 5 பேர் பலி; 9 பேர் மருத்துவமனையில் அனுமதி
ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் அருகே கோகுல்பாடு என்ற பகுதியில் உள்ள பாட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
விசாகப்பட்டினம் மாவட்டம் கோகுல்படு கிராமத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் நேற்று மாலை ஐந்து மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இதில், பெண் பணியாளர்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த தீக்காயமடைந்த மேலும் 9 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் நான்கு பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். வெடி விபத்தின் விளைவாக தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதிகளுக்கும் தீ பரவியது என்று தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
விபத்திற்கான காரணம் தெரியவில்லை என்றும், இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ஆந்திரப்பிரதேச அரசு அறிவித்துள்ளது.