மேற்கு வங்கத்திலிருந்து நூற்றுக்கணக்கான வெடிகுண்டுகளை அனுப்பிய வங்கதேச தீவிரவாதிகள்!
புர்த்வான் வெடிகுண்டு வழக்கை விசாரித்த புலனாய்வு அமைப்புகள், இந்த வழக்கில் சந்தேகத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஷேக் யூசுப் உள்ளிட்டோரிடம் நடத்திய விசாரணையின்போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
அதில் முக்கியமானது 2013 முதல் 2014 வரை ஓராண்டு காலத்தில் வங்கதேசத்திற்கு ஐந்து பார்சல்களாக வெடிகுண்டுகளை அனுப்பியது தெரிய வந்தது. இந்த வெடிகுண்டுகளை ஜமாத் உல் முஜாஹிதீன் அதாவது ஜேஎம்பி எனப்படும் ஜமாத் உல் பங்களாதேஷ் தீவிரவாத அமைப்புதான் அனுப்பியிருந்தது.
இந்த வெடிகுண்டுகளை கடந்த 2 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் வைத்துத் தயாரித்துள்ளனர். பின்னர் ஐந்து பிரிவுகளாக இதை வங்கதேசத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த வெடிகுண்டுகள் அனைத்தும் வங்கதேசத்திற்கு போய் விட்டன.
அதி நவீன குண்டுகள்
ஒவ்வொரு பார்சலிலும் 60 அதி நவீன வெடிகுண்டுகளும், நாட்டு வெடிகுண்டுகளும் இருந்துள்ளன. இந்த குண்டுகளை அனுப்பியதில் கெளசர் மற்றும் ஷேக் யூசுப் ஆகியோர் முக்கியப் பங்காற்றியுள்ளனர்.
எல்லை வீரர்களுக்கு லஞ்சம் கொடுத்து
உள்ளூர் அமைப்புகள் சிலவற்றின் உதவியோடு இவற்றை இவர்கள் அனுப்பியுள்ளனர். எல்லையில் காவல் நிற்கும் வீரர்களுக்கு லஞ்சம் கொடுத்து இந்த வெடிகுண்டுகளை இவர்கள் அனுப்பியிருக்கலாம் என்று தெரிகிறது.
தொடர் குண்டுவெடிப்புக்குத் திட்டம்
ஒரே ஆண்டில் மிகப் பெரிய அளவில் தொடர் குண்டுவெடிப்புகளை நடத்துவதற்கு வசதியாக ஒவ்வொரு பெட்டியையும் தனித் தனியாக அனுப்பி வைத்துள்ளனர் தீவிரவாதிகள். வங்கதேச அரசுக்கு எதிராக நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட குண்டுகளை வெடிப்பது என்பதுதான் தீவிரவாதிகளின் திட்டமாகும்.
நான்கு ஆண்டு திட்டம்
தங்களது செயல்பாடுகளுக்காக பல்வேறு பிரிவுகளை மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் உருவாக்கியுள்ளனர் இந்த தீவிரவாதிகள். அதேசமயம், இதை விரிவுபடுத்தும் திட்டம் அவர்களிடம் இல்லை.
குண்டு தயாரிப்பில் கவனம்
தங்களுக்குத் தேவையான செட்டப்பை உருவாக்கி விட்டதால் மேலும் விரிவுபடுத்த அவர்கள் விரும்பவில்லை. மாறாக வெடிகுண்டுகளைத் தயாரித்து அனுப்பி வைப்பதில் கவனம் செலுத்தி வந்துள்ளனர்.
சீர்குலைந்த திட்டம்
உண்மையில், தங்களது திட்டத்தின் கடைசிக் கட்டத்தில் அவர்கள் இருந்துள்ளனர். ஆனால் அது முடியும் முன்பே புர்த்வானில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு அமைந்து விட்டது. இதனால் அவர்களின் திட்டம் சீர்குலைந்து போய் விட்டது.
முடக்க உளவு அமைப்புகள் தீவிரம்
தற்போது இந்த அமைப்பின் ஒவ்வொரு பிரிவையும் கண்டுபிடித்து செயல்படாமல் முடக்குவதே தேசிய புலனாய்வு அமைப்பின் முக்கியப் பணியாக மாறியுள்ளது. அவர்களுக்கு உள்ளூரில் இருந்த தொடர்புகளை முழுமையாக கண்டறிய வேண்டியுள்ளது. யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பதை அடையாளம் காண வேண்டியுள்ளது.
மீண்டும் உருவெடுக்காமல் தடுக்க
அதேசமயம், ஜேஎம்பி தீவிரவாதிகள் மீண்டும் உருவெடுக்கவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே அதைக் கண்காணிக்க வேண்டியதும் அவசியமாகும். மொத்தத்தில் இந்தியாவிலிருந்து இந்த தீவிரவாத அமைப்பை முற்றி்லும் அகற்றுவதில் தற்போது உளவு அமைப்புகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.