நகைக்கடை வர்த்தகர்கள் போராட்டம் வீண்.. தங்கநகை மீதான கலால் வரியில் மாற்றம் இல்லை: ஜெட்லி
டெல்லி: தங்க நகை உற்பத்தி விலை மீதான 1% கலால் வரியை திரும்பப் பெறும் திட்டமில்லை என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். தங்க நகை விற்பனையாளர்கள் போராட்டம் நடத்தியபோதிலும், மத்திய அரசு அதற்கு பணிய மறுத்துவிட்டது.
2016-17ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, தங்க நகைகள் மீது 1% கலால் வரி விதிக்கப்படுவதாக, அறிவித்தார்.
இதை திரும்பப் பெறக் கோரி, கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் தங்க நகை வர்த்தகர்கள் கடையடைப்புப் போராட்டம் நடத்தினர்.
சுமார் 2 வாரங்களுக்கு மேலாக நகை வர்த்தகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து பல ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்பட்டது. இதுகுறித்து இன்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது: தங்க நகைகள் மீதான 1% கலால் வரியை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்பு இல்லை. மேலும், மத்திய அரசு நிர்ணயித்தபடி, மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலான கலால் வரியை ஜூலை 1ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.