கடந்த 6 வருடங்களில் தலித் நீதிபதி ஒருவர் கூட சுப்ரீம் கோர்ட்டில் பணி நியமனமாகவில்லை!
டெல்லி: கடந்த 6 வருடங்களில் தாழ்த்தப்பட்ட (SC) வகுப்பை சேர்ந்த எந்த ஒரு நீதிபதியும் உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறவில்லை.
தலைமை நீதிபதி தலைமையிலான நீதிபதிகள் கொலீஜியம், ஹைகோர்ட் தலைமை நீதிபதிகளையும், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளையும் தேர்ந்தெடுத்து வருகிறது.
இந்த நடைமுறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று கூறி, அரசு தரப்பையும் இணைத்துக்கொண்டு நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் நடைமுறையை உறுதிப்படுத்தும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவந்தது மோடி அரசு. இதற்கு நாடாளுமன்றத்தில் ஒருமித்த ஆதரவு கிடைத்திருந்தது. ஆனால் சட்டத்தை ரத்து செய்து சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில் கொலீஜியம் முறையில் கடந்த 6 ஆண்டுகளில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் கூட உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவில்லை என்ற தகவல் தெரியவந்துள்ளது. மேலும் இப்போது, நாட்டின் எந்த ஒரு ஹைகோர்ட் தலைமை நீதிபதியும், தாழ்த்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்தவர் இல்லை. இத்தனைக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் எண்ணிக்கை நாட்டின் மக்கள் தொகையில் 16 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
சுப்ரீம்கோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்து 2010, மே 11ல் ஓய்வு பெற்ற கே.ஜி.பாலகிருஷ்ணன்தான் கடைசியாக உச்சநீதிமன்றம் பார்த்த தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த நீதிபதியாகும். இதேபோல, பழங்குடியின ஜாதியை சேர்ந்த பல நீதிபதிகளும் சுப்ரீம்கோர்ட் நீதிபதிகளாக பணி உயர்வு கிடைக்காமல் உள்ளனர்.
கடந்த 10 வருடங்களில் உச்சநீதிமன்றத்திற்கு, மூன்று பெண் நீதிபதிகள் மட்டுமே கொலீஜியத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதில் நீதிபதி ஞான் சுதா மிஸ்ரா மற்றும் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகிய பெண் நீதிபதிகள் இப்போது ஓய்வு பெற்றுவிட்டனர். தமிழகத்தை சேர்ந்த ஆர்.பானுமதி மட்டுமே பெண் நீதிபதி என்ற வகையில் பணியில் உள்ளார்.
இம்மாத தொடக்கத்தில், மத்திய பிரதேசம், அலகாபாத் மற்றும் கேரளா மாநிலங்களின் தலைமை நீதிபதிகள் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயர்வு தரப்பட்டனர். ஆனால், இதில் சீனியாரிட்டி மிஸ் ஆகிவிட்டதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது.
ஏனெனில், மேற்கண்ட மூன்று நீதிபதிகளைவிடவும், மணிப்பூர் தலைமை நீதிபதி மொகப்பத்ரா, பாம்பே ஹைகோர்ட் தலைமை நீதிபதி டி.ஹெச்.வகேலா, கல்கத்தா ஹைகோர்ட் தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர் ஆகியோர் சீனியர்கள். இருப்பினும் இவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கவில்லை.
இதுகுறித்து ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன், நாளிதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், நான் தலைமை நீதிபதியாக இருந்தபோது, பி.டி.தினகரனை (தமிழகத்தை சேர்ந்தவர்) உச்சநீதிமன்ற நீதிபதியாக்க முயன்றேன். ஆனால் அவர் மீது சர்ச்சை எழுந்திருந்த காரணத்தால் முடியாமல் போனது. பலவீனமான ஜாதி பிரிவினருக்கு உரிய முக்கியத்துவம் கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது ஆசை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.