மாஜி மனைவியின் தொலைபேசியை ஒட்டு கேட்ட கணவருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம்!
மேற்குவங்கத்தில் பிரிந்து சென்ற மனைவியின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்ட நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா: திருமண உறவில் இருந்த போது பகிர்ந்து கொண்ட தொலைபேசி மற்றும் முகநூல் பக்கத்தை வேவு பார்த்த நபருக்கு தண்டனை கிடைத்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த தம்பதி கடந்த 2013ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இதனையடுத்து மனைவி மீது சந்தேகப்பட்ட கணவனின் செயலால் உறவில் விரிசல் ஏற்பட்டு பாதிக்கப்பட்ட பெண், ஒரே ஆண்டில் அதாவது 2014ம் ஆண்டு ஜுன் மாதம் ஹவுரா நீதிமன்றத்தில் விவாகரத்துக்கு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய அனுமதியின்றி தொலைபேசி உரையாடலை ஒட்டு கேட்ட கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பெண் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
மேற்கு வங்க சைபர் குற்றப்பிரிவு போலீசாரிடம் பெண் அளித்துள்ள புகாரில், நான் என்னுடைய கணவருடன் உறவில் இருந்த போது முகநூல் மற்றும் ஈமெயில் அக்கவுண்ட்டை பகிர்ந்து கொண்டேன். அதை பயன்படுத்தி நாங்கள் பிரிந்த பின்னர் என்னுடைய மெயில் மற்றும் பேஸ்புக்கை நோட்டமிட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.
மேலும் எனக்கு தெரியாமலேயே என்னுடைய தொலைபேசியில் மேல்வேர் என்ற சாப்ட்வேரை இணைத்து எனக்கு வரும் அழைப்புகளை ஒட்டு கேட்டுள்ளார், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் இருந்து 50 ஆயிரம் அபராதம் வசூலிக்கவும் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஐடி தண்டனைச் சட்டம் 43(A), (b),66(c) மற்றும் 72 ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆணையிட்டுள்ளது. இந்த சட்டத்தின் கீழ் 5 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.