ராஜஸ்தானில் கைதான அதிகாரி பொக்ரான் விஞ்ஞானிகளை உளவு பார்த்தது அம்பலம்
டெல்லி: பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு உளவு பார்த்ததாக ராஜஸ்தானில் கைது செய்யப்பட்ட வருவாய்த் துறை அதிகாரி, பொக்ரான் விஞ்ஞானிகளை உளவு பார்த்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ராணுவம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் ரகசியங்களை பாகிஸ்தான் நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்குக் கொடுத்ததாக பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரியை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே, இதே குற்றச்சாட்டில் எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) தலைமை காவலர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் ராஜஸ்தானில் உள்ள பொக்ரான் பகுதியைச் சேர்ந்த வருவாய்த் துறை அதிகாரி ஆவார். அவரது பெயர் கோவர்தன் சிங். முன்னாள் ராணுவ அதிகாரியான இவர், பொக்ரானில் இருந்து 5 கிமீ தொலைவில் உள்ள கேட்டோளை எனும் இடத்தில் வருவாய்த் துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
இந்த இடமானது பொக்ரானில் அணு ஆயுத சோதனை நடந்த இடத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இவர் ஐஎஸ்ஐக்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். தற்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதில் பொக்ரான் விஞ்ஞானிகளை கோவர்தன் உளவு பார்த்து வந்தது தெரிய வந்துள்ளது.
விஞ்ஞானிகள் எங்கு போகிறார்கள், அவர்களது நடமாட்டம், எத்தனை பேர் போகிறார்கள், வருகிறார்கள், யார் யார், பெயர் முகவரி உள்ளிட்டவை குறித்து தகவல் கொடுத்து வந்துள்ளார் இவர்.
அதேசமயம், கோவர்தனுக்கு நேரடியாக பாகிஸ்தான் உளவு அமைப்போடு தொடர்பில்லை என்றும், உத்திரப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் மூலமாகவே அவருக்கு பணப்பரிமாற்றம் நடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து கோவர்தனின் வங்கிக் கணக்கை போலீசார் ஆய்வு செய்தனர். கோவர்தனுக்கு பணம் அனுப்பிய நபர் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.