அர்ணாப் கோஸ்வாமி மீது திருட்டு வழக்கு பதிவு செய்த டைம்ஸ் நவ் சேனல் நிர்வாகம்
மும்பை: ரிபப்ளிக் டிவி நிறுவனரான பத்திரிகையாளர் அர்ணாப் கோஸ்வாமி மீது திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் ரிபப்ளிக் டிவி சேனலை இவர் ஆரம்பித்தார். முன்னதாக பென்னட், கோல்மேன் மற்றும் கோ லிமிட்டெட் நிறுவனத்தின், டைம்ஸ்நவ் சேனலில் ஆசிரியர் பொறுப்பில் இருந்தார். இந்த நிறுவனம்தான் தற்போது மும்பை, ஆசாத் மைதான் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளது.
அர்ணாப் கோஸ்வாமி மற்றும் ரிபப்ளிக் டிவி நிருபர் பிரேமா ஸ்ரீதேவி ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மே 6 மற்றும் மே 8ம் தேதிகளில் ரிபப்ளிக் டிவியில் ஒளிபரப்பப்பட்ட ஆடியோ தொடர்பாக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காப்பி ரைட் உரிமையை மீறி டைம்ஸ் நவ்வில் வேலை பார்த்தபோது பதிவு செய்த ஆடியோக்களை இப்போது தங்கள் சேனலில் இவ்விருவரும் ஒளிபரப்பு செய்ததாக புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அர்ணாப் மற்றும் ஸ்ரீதேவி இருவரும், வேண்டுமென்றே, தங்கள் ஆதாயத்திற்காக, அறிவுசார் சொத்துரிமையை மீறி டைம்ஸ் நவ் சேனலின் சொத்துக்களை பயன்படுத்தியதாக புகாரில் கூறப்பட்டுள்ளது. திருட்டு, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் அர்ணாப் மற்றும் பிரேமா ஸ்ரீதேவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.