கர்நாடகா முன்னாள் முதல்வர் தரம் சிங் மாரடைப்பால் காலமானார்
கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான தரம் சிங் இன்று மாரடைப்பினால் காலமானார்.
பெங்களூரு: கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் தரம்சிங் இன்று மாரடைப்பால் காலமானார்.. அவருக்கு வயது 80.
கர்நாடகா சட்டசபைக்கு 1978 முதல் 2008ஆம் ஆண்டுவரை தொடர்ச்சியாக ஏழு முறைதேர்ந்தெடுக்கப்பட்ட இவர் தேவராஜ் அர்ஸ், குண்டுராவ், பங்காரப்பா, வீரப்பமொய்லி, எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோர் அமைச்சரவையில் இடம் பெற்றவர்.
கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவராக தரம்சிங் 2004ஆம் ஆண்டு முதல் 2006ஆம் ஆண்டு வரை முதல்வராக பதவி வகித்தார்.
2008ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த அவர் அதன்பின் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பிடார் லோக்சபா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
80 வயதான தரம் சிங்கிற்கு இன்று காலை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக அவர் பெங்களூரில் உள்ள எம்.எஸ். ராமைய்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களில் அவர் உயிர் பிரிந்தது.
திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தரம் சிங் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.