டெல்லி பெண்களுக்கு ஒரு நற்செய்தி: ரக்ஷாபந்தன் அன்று பேருந்து பயணம் 'ஃப்ரீ, ஃப்ரீ, ஃப்ரீ'
டெல்லி: ரக்ஷாபந்தன் பண்டிகை அன்று டெல்லியில் வசிக்கும் பெண்கள் டிடிசி மற்றும் (ஆரஞ்சு) கிளஸ்டர் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
ரக்ஷாபந்தன் பண்டிகை நாடு முழுவதும் நாளை கொண்டாடப்படுகிறது. பெண்கள் தங்கள் சகோதரர்கள் மற்றும் தாங்கள் சகோதரர்களாக கருதும் ஆண்களின் கையில் ராக்கி கட்டுவார்கள். பதிலுக்கு அவர்கள் பெண்களுக்கு அன்பளிப்பு அளிப்பார்கள்.
இந்நிலையில் டெல்லி போக்குவரத்து துறை அமைச்சர் கோபால் ராய் கூறுகையில்,
ரக்ஷாபந்தன் பண்டிகை தினத்தன்று காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பெண்களுக்கு இலவச பயணம் அளிக்குமாறு டெல்லி போக்குவரத்து கார்பரேஷனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பெண்களுக்கு பாதுகாப்பான, வசதியான பயணத்தை அளிக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் ஓடும் ஏசி இல்லா டிடிசி பேருந்துகள் மற்றும் கிளஸ்டர் பேருந்துகளில் பெண்கள் நாளை இலவசமாக பயணம் செய்யலாம் என்றார்.
இலவசம் என்பதால் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க நாளை கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.