வருகிறது ஏர் கேரளா... புலம் பெயர்ந்த மலையாளிகளுக்காக இலவச விமான சேவை... உம்மன்சாண்டி அறிவிப்பு
திருவனந்தபுரம்: பணி நிமித்தம் மத்திய கிழக்கு நாடுகளில் வசித்து வரும் கேரளாவைச் சேர்ந்தவர்களில், நீண்ட காலம் சொந்த ஊர் வராதவர்களின் வசதிக்காக, இலவச விமானப் பயணத்தை ஏற்படுத்தித் தரும் ஏர் கேரளா சேவை விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் உம்மன்சாண்டி அறிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளில் ஏராளமான மலையாளிகள் பணி நிமித்தமாகச் சென்று தங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பயணச் செலவுக்கு பணம் இல்லாமல் சொந்த மாநிலம் திரும்ப வழி இல்லாமல் தவித்து வருகின்றனர். தங்களது ஊதியத்தை குடும்பத்தினரின் சாப்பாட்டிற்காக அனுப்பி வைத்து விட்டு, அவர்களை நேரில் பார்க்க வழியில்லாமல் வேதனையில் வாழ்ந்து வருகின்றனர்.
எனவே, அத்தகையவர்களின் துயரத்தைக் களையும் வகையில் கேரள முதல்வர் உம்மன்சாண்டி ஏர் கேரளா என்ற அரசு சார்பிலான விமான சேவையை அறிவித்துள்ளார்.
உம்மன்சாண்டி...
சட்டசபைக் கூட்டத்தை முடித்தபின், நேற்று செய்தியாளர்கள் மத்தியில் இந்தத் தகவலை அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "சமீபத்தில் வெளிநாட்டில் வசித்து வரும் ஒருவர் தனது மகளின் திருமணத்திற்குக் கூட கேரளா வர முடியாமல் வேதனைப்பட்டது குறித்துக் கேள்விப்பட்டேன். நண்பர்கள் பயணச் செலவிற்காக அளித்த பணத்தையும் அவர் தனது மகளின் திருமணத்திற்குப் பயன்படுத்தச் சொல்லிவிட்டு வெளிநாட்டிலேயே இருந்துள்ளார்.
ஏர் கேரளா...
இது போல், ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்தினரை, உறவினர்களைப் பார்க்க முடியாமல், பணி நிமித்தம் வெளிநாடுகளில் சிக்கியுள்ளனர். எனவே, இவர்களின் வசதிக்காக கேரளாவில் இருந்து இலவச விமானப் பயணங்களை ஏற்படுத்தித் தர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கென தனியாக ஏர் கேரளா என்ற விமான சேவை தொடங்கப்பட உள்ளது.
இலவசம்...
குறைந்த கட்டணத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கேரளா வர ஏர் கேரளா விமானச் சேவை கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஏற்கனவே, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கேரளாவிற்கு பல விமானங்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், அவற்றில் கட்டணம் என்ற பெயரில் பயணிகள் கசக்கிப் பிழியப்படுகின்றனர். எனவே, ஏர் கேரளாவில் இலவச பயணம் தர முடிவு செய்யப்பட்டுள்ளது.
தகுதி...
கடந்த 10 ஆண்டுகள் அல்லது ஐந்து ஆண்டுகள் கேரளா திரும்பாதவர்கள் ஏர் கேரளாவில் இலவசமாக பயணம் மேற்கொள்ளத் தகுதியானவர்கள் ஆவார்கள்" என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சிக்கல்கள்...
ஏர் கேரளா விமானச் சேவையைத் தொடங்குவதற்கு நிதி அளிக்க பலரும் தயாராக உள்ளனர். ஆனால், ஏர் கேரளா விமானச் சேவையைத் தொடங்குவதற்கு நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. ஏனென்றால், 5 ஆண்டுகள் உள்நாட்டு விமானச் சேவை புரிந்தால் மட்டுமே வெளிநாடுகளுக்கு பறக்க அனுமதி அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.