நாட்டில் 45% கிராமப்புற வீடுகள் குடிசைகளே: சென்ஸஸ் தகவல்
டெல்லி: இந்தியாவில் 27 சதவீதம் மக்களிடம் இன்னும் செல்போன் சென்றடையவில்லை என்றும், குளிர்சாதன பெட்டி வைத்துள்ளோர் 11.04 சதவீதம் என்றும் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு கூறுகிறது.
பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றாலும்கூட, சமூக, பொருளாதார, ஜாதி வாரி கணக்கெடுப்பு, சுதந்திர இந்தியாவில் நடைபெற்றது இதுதான் முதல்முறையாகும். எனவே பல புதிய தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.
பிரிட்ஜ்
இந்தியாவில் 11.04 சதவீதம் வீடுகளில் பிரிட்ஜ் எனப்படும் குளிர்சாதன பெட்டி உள்ளது. கோவா மாநிலத்தில்தான் கிராமப்புறங்களில் பிரிட்ஜ் வைத்திருப்போர் எண்ணிக்கை அதிகம். அங்குள்ள கிராமங்களில் 69 சதவீத மக்கள் பிரிட்ஜ் வைத்துள்ளனர். இதற்கு நேர் எதிராக உள்ளது பீகார். அங்கு கிராமங்களில் 2.61 சதவீதம்பேர்தான் பிரிட்ஜ் வைத்துள்ளனர்.
செல்போன்
இந்தியாவில் 5 கோடி பேர் வீட்டில் டெலிபோன் இணைப்போ, அல்லது செல்போனோ கிடையாது. இந்தியாவின் 179 மில்லியன் மக்கள் தொகையில், சுமார் 70 சதவீதத்துக்கு மேற்பட்டோரிடம் செல்போன்கள் உள்ளன. வீடுகள் அடிப்படையில் இன்றி, மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால், நாட்டில் 27 சதவீதம் பேரிடம் செல்போன் இல்லை. சட்டீஸ்கர், ஒடிசா ஆகிய மாநிலங்கள்தான் இதில் பின்தங்கியுள்ளன.
விவாகரத்து கம்மி
கிராமங்களில் விவாகரத்து என்பது மிக குறைந்த அளவிலேயே உள்ளது. அங்கு விவாகரத்தானோர் எண்ணிக்கை 0.12 சதவீதமாகும். பெண்கள் குடும்ப தலைவர்களாக செயல்படும் வீடுகள் 12.83 சதவீதமாக உள்ளது. மனித மலத்தை மனிதனே அள்ளும் அவலம் இன்னும் நின்றபாடில்லை. நாட்டில், 1 லட்சத்து 80 ஆயிரத்து 657 மலம் அள்ளும் தொழிலாளர்கள் உள்ளனர்.
40 சதவீதம் பேருக்கு நிலம் இல்லை
நாட்டில் 4 சதவீதம் பேர், தொழிலாளர்களை அழைத்துச் செல்லும், 3 அல்லது 4 சக்கர வாகனங்கள் வைத்துள்ளநர். 40 சதவீத இல்லத்தாருக்கு, சொந்த நிலம் இல்லை. விவசாயம்தான் நாட்டின் முதுகெலும்பு என்று சொல்லும் இந்தியாவில் 40 சதவீத கிராமப்புற விவசாய நிலங்களுக்கும் இன்னும் சரியான நீர்ப்பாசனம் கிடைக்கவில்லை. கிராமப்புறங்களிலுள்ளோரில் 35 சதவீதம் பேர் எழுத்தறிவில்லாதவர்கள். அதில் அதிகம் பேர் பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தானை சேர்ந்தவர்கள்.
குடிசைகள்
நாட்டில் 45% கிராமப்புற வீடுகள் குடிசை போன்ற வீடுகளாகவே உள்ளன. களிமண், மரம், பிளாஸ்டிக் போன்றவற்றால் ஆன வீடுகள்தான் அவை. நகர்ப்புறங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் முளைத்துக் கொண்டே செல்லும் நிலையில், மறுபக்கம், கிராமங்களில் வீடு இல்லாத ஏழைகள்தான் அதிகம் என்பதை புடம்போட்டு காட்டுகிறது இந்த புள்ளி விவரம்.