கெயில் திட்டத்தால் 1 லட்சம் மரங்கள் வெட்டுப்படும்... சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சீராய்வு மனு
டெல்லி: தமிழகத்தில் விவசாய நிலங்களில் எரிவாயு குழாய்களைப் பதிக்கும் கெயில் திட்டத்துக்கு அனுமதி அளித்து பிறப்பித்த தீர்ப்பை சீராய்வு செய்யக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. கெயில் எரிவாயு திட்டம் செயல்படுத்தப்பட்டால் 279 ஹெக்டேர் நிலங்களில் விவசாயம் செய்ய இயலாத நிலை ஏற்படும் என்றும், 1 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டு, 758 வீடுகள் இடிக்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
கேரள மாநிலம், கொச்சியில் இருந்து குழாய்கள் பதிக்கப்பட்டு கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஏழு மாவட்டங்களின் வழியாக பெங்களூரு வரை எரிவாயு கொண்டு செல்ல கெயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. விவசாய நிலங்களின் ஊடே 310 கிலோ மீட்டர் நீளத்திற்கும், 20 மீட்டர் அகலத்திற்கும் எரிவாயுக் குழாய்கள் பதிக்கப்படும்.
இதற்கு மேற்கு மண்டலத்தில் உள்ள 7 மாவட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனையடுத்து சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவுப்படி, அரசு தலைமைச் செயலாளரால் கடந்த 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன.
கருத்துக் கேட்புக் கூட்டங்களில் ஏழு மாவட்டங்களின் 134 கிராமங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 428 விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், தேசிய நெடுஞ்சாலை வழியாகவே குழாய்களை பதிக்க கெயில் நிறுவனம் அறிவுறுத்தப்பட்டு, அரசு சார்பில் அரசாணையும் வெளியிடப்பட்டது.
2013-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் கெயில் நிறுவனம் தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில், தேசிய நெடுஞ்சாலை வழியாக திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியமில்லை எனத் தெரிவித்தது. அரசின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கெயில் நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், அரசின் உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டது.
இந்தத் தடைக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு மீது கடந்த செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது. விளை நிலங்களின் வழியாக குழாய்கள் பதிக்கவும், எரிவாயு திட்டத்தைச் செயல்படுத்தவும் கெயில் நிறுவனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இது, கொங்கு மண்டலப் பகுதியில் உள்ள விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றத்தின் அனுமதியை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்தனர்.
விவசாயிகள் உள்ளிட்ட பல தரப்பினரின் வேண்டுகோளை ஏற்று, உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் மீது தமிழக அரசின் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கடந்த வியாழக்கிழமை ஆலோசனை நடத்தப்பட்டது.
அப்போது, சீராய்வு மனு தாக்கல் செய்ய அறிவுறுத்திய முதல்வர் ஜெயலலிதா, அதில் எடுத்துரைக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து அறிவுரையும் வழங்கினார். இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் இன்று தமிழக அரசின் சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு தாக்கல் செய்த சீராய்வு மனுவில், கெயில் எரிவாயு திட்டம் செயல்படுத்தும்பட்சத்தில் சுமார் 1.2 லட்சம் மரங்களை வெட்ட வேண்டிய நிலை ஏற்படும் என்றும், பல ஆயிரக்கணக்காக ஏக்கர் விளை நிலங்களும் விவசாயிகளும் பாதிக்கப்படுவார்கள் என்பதால், விவசாய நிலங்களைத் தவிர்த்து எரிவாயு குழாய்களை சாலையோரம் பதிக்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
கெயில் திட்டம் செயல்படுத்தப்பட்டால் 279 ஹெக்டேர் நிலங்களில் விவசாயம் செய்ய இயலாத நிலை ஏற்படும் என்றும், 1 லட்சம் மரங்கள் வெட்டப்பட்டு, 758 வீடுகள் இடிக்கப்படும் என்றும் தமிழக அரசு கூறியுள்ளது. இது தவிர 588 நீர் நிலைகளை மூடும் அபாயம் ஏற்படும் என்றும், அப்படி நீர் நிலைகள் மூடப்பட்டால் வறட்சி நிலவ வாய்ப்பு இருப்பதாகவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. இதனால் எரிவாயு குழாய்களை விவசாய நிலங்களைத் தவிர்த்து சாலையோரம் பதிக்க உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசு கோரியுள்ளது.