அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட 43 நாட்டினருக்கு இ-விசா வசதி: இந்தியா அறிமுகம்
டெல்லி: ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட 43 நாட்டினருக்கு இணையதளம் மூலம் இ-விசா வழங்கும் திட்டம் நவம்பர்-27 முதல் அறிமுகப்படுத்தபட உள்ளதாக மத்திய சுற்றுலத் துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த புதிய இ விசா திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மாவும் தொடங்கி வைப்பார்கள் என்று சுற்றுலாத்துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக அந்த அதிகாரி கூறியதாவது :-
இ-விசா...
இந்தியாவுக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு பயணிகள் இணைய தளம் மூலம் பதிவு செய்து இ-விசா பெறலாம். இந்த வசதி வருகிற 27-ந்தேதி முதல் 43 நாடுகளுக்கு அறிமுகம் செய்யப்படுகிறது.
முதல் கட்டமாக...
முதல் கட்டமாக அமெரிக்கா, ரஷியா, பிரேசில், ஜெர்மனி, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மொரீஷியஸ் உள்ளிட்ட 43 நாடுகளின் பயணிகள் இந்த வசதியை பெறுவார்கள்.
அடுத்த 2 ஆண்டுகளில்...
அடுத்த 2 ஆண்டுகளில் இத்திட்டம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், ஈரான், இலங்கை, சோமாலியா, நைஜீரியா போன்ற சில குறிப்பிட்ட நாடுகள் தவிர அனைத்து நாடுகளுக்கும் பரவலாக்கப்படும்.
96 மணி நேரத்தில்...
இணையதளம் மூலம் இ-விசா பெற விரும்பும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குறிப்பிட்ட இணையத்தள முகவரிக்கு சென்று அதை பெறுவதற்குரிய கட்டணத்தை செலுத்தவேண்டும். அதன்பின்னர் அவர்களுக்கு 96 மணி நேரத்தில் இ-விசா வழங்கப்பட்டு விடும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.