ராஜஸ்தானில் பலாத்காரத்தை தடுக்க முயன்ற சிறுமியை வெட்டிக் கொன்ற கொடூரன்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டவனை தடுத்த 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முற்பட்டவனே கோடரியால் வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள தோல்பூர் மாவட்டம், பசேடி பகுதியில் வசித்துவந்த அந்த சிறுமி நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது, அதே பகுதியில் வசிக்கும் விஷ்ணு தாக்குர் என்பவன் வீட்டினுள் நுழைந்து அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.
அவனது செயலை கண்டு பதறிப்போன சிறுமி இதை தடுக்க முயன்று கூச்சலிட்டாள். அதனால் ஆத்திரமடைந்த அவன் வீட்டினுள் இருந்த கோடரியை எடுத்து அந்தப் பெண்ணை வெட்டிக் கொன்றான்.
மரண பயத்தில் அந்த சிறுமி அலறித்துடித்த சப்தம் கேட்டு விரைந்தோடிவந்த அக்கம்பக்கத்து வீட்டினர் ரத்தம் தெறிக்க கொடூரமாய் அங்கு நின்றிருந்த கொலையாளியை பிடித்து அடித்து, உதைத்து, கட்டிப்போட்டு போலீசாருக்கு தகவல் அளித்தனர்.
விரைந்துவந்த போலீசார் அவனை கைது செய்தனர். வெட்டுண்டு கிடந்த சிறுமியின் பிரேதத்தை பரிசோதனைக்கு அனுப்பிவைத்து இந்த கொடூர சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.