பெங்களூரில் பரிதாபம்... காதல் திருமணம் செய்த 14 வயது சிறுமி மர்மமரணம்... 22 வயது கணவர் மீது புகார்
பெங்களூரு: பெங்களூருவில் காதல் திருமணம் செய்த 14 வயது சிறுமி மர்மமான முறையில் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, அவரது 22 வயது கணவர் மீது சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
பெங்களூரு எலகங்கா பகுதியை சேர்ந்த சுதாகர் என்பவருடைய மகள் மேகனா (14). இவர் அதே பகுதியை சேர்ந்த ஆம்புலன்ஸ் டிரைவர் கிஷோர் (22) என்பவரைக் காதலித்து வந்தார். இந்தக் காதலுக்கு மேகனாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, அவர் கிஷோருடன் மாயமானார். ஆந்திராவுக்குப் போய் விட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அவருடைய உறவினர் ஆந்திரா போலீசாரிடம் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே கிஷோர், மேகனாவுடன் மண்டியாவில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருப்பது தெரிய வந்து, கிஷோரின் தாய் அவர்களுக்கு கோவில் ஒன்றில் மாலை மாற்றி திருமணம் செய்து வைத்தார். பின்னர் பெங்களூருவில் வீடெடுத்து அவர்களை தங்கவும் வைத்துள்ளார்.
மேகனாவின் குடும்பத்தாருக்கும் அவர்களது இருப்பிட முகவரி கிடைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து எங்கே மேகனாவின் பெற்றோர் தங்களைப் பிரித்து விடுவார்களோ என அஞ்சிய இருவரும் எலி மருந்தை சாப்பிட்டனர். பின்னர் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், நேற்று காலை மேகனாவின் பெற்றோருக்கு அவர் உடல்நிலை சரியில்லாமல் எலகங்கா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல் கிடைத்தது. இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், உடனடியாக அங்கு விரைந்தனர்.
ஆனால், மருத்துவமனையில் மேகனா உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். விஷம் குடித்து அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த அவரது குடும்பத்தார், 18 வயது நிரம்பாத சிறுமியை ஏமாற்றி கிஷோர் திருமணம் செய்து செய்து கொண்டதாகவும், அவளுடைய வாயில் விஷம் ஊற்றி கொலை செய்துள்ளார் எனவும் குற்றம்சாட்டினார்கள். இதுகுறித்து அவர்கள் எலகங்கா போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மேகனாவின் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.