திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த, ஜீன்ஸ் அணிய தடை: காப் பஞ்சாயத்து உத்தரவு
ஜெய்பூர்: ராஜஸ்தானில் திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்தவும், ஜீன்ஸ் அணியவும் தடை விதித்து காப் பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் உள்ள கனானா கிராமத்தில் செயல்படும் காப் பஞ்சாயத்து கூடி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதாவது கிராமத்தில் உள்ள திருமணமாகாத பெண்கள், சிறுமிகள் செல்போன் பயன்படுத்த, ஜீன்ஸ் அணிய பஞ்சாயத்து தடை விதித்துள்ளது.
திருமணத்தன்று ஆண்கள் வேட்டி அணிய வேண்டும், பெண்கள் காக்ரா அணிய வேண்டும் என பஞ்சாயத்து தெரிவித்துள்ளது. பஞ்சாயத்தின் இந்த உத்தரவுகளை பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஆனால் பஞ்சாயத்து சில நல்ல முடிவுகளையும் எடுத்துள்ளது. அதாவது குழந்தை திருமணம் செய்யக் கூடாது. குழந்தைகள் அனைவரையும் பள்ளிக்கு அனுப்ப வேண்டும், மதுவுக்கு தடை உள்ளிட்ட உத்தரவுகளையும் பஞ்சாயத்து பிறப்பித்துள்ளது.
இது குறித்து கனானா கிராமத்தைச் சேர்ந்த நாகராம் சவுத்ரி என்பவர் கூறுகையில்,
செல்போன்கள் மூலம் சிறுமிகளின் ஆபாசப் படங்கள் வெளியாகி வருகிறது. இதை தடுக்கவே சிறுமிகள், திருமணமாகாத பெண்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை அடுத்து பெற்றோர்கள் தங்களின் மகள்களை செல்போன் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளனர் என்றார்.