கோவா தேர்தலில் வெற்றி பெற்ற 40 எம்எல்ஏக்களும் கோடீஸ்வரர்கள்.. 9 பேர் மீது கிரிமினல் வழக்கு
கோவா மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற 40 ஏம்.எல்.ஏக்களும் கோடீஸ்வரர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் 9 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கோவா : கோவா மாநிலத் தேர்தலில் வெற்றி பெற்ற 40 ஏம்.எல்.ஏக்களும் கோடீஸ்வரர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் 9 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
கோவா , உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் கோவாவில் காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளிலும், பாஜக 13 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதனையடுத்து சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் ஆதரவை பெற்று பாஜக ஆட்சி அமைத்தது.
இந்நிலையில் இம்முறை கோவா சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து எம்.எல்.ஏக்களும் கோடிஸ்வரர்கள் என்று தெரியவந்துள்ளது. தேர்தலில் போது வேட்பாளர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள தகவல்களை ஆய்வு செய்ததில் இந்த தகவல் கிடைத்துள்ளது.
கோடீஸ்வர ஏம்.எல்.ஏக்கள்
கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் 93 சதவீத ஏம்.ஏக்கள் அதாவது 37 எம்.எல்.ஏக்கள் கோடீஸ்வரர்களாக இருந்துள்ளனர். இம்முறை 3 சதவீதம் அதிகரித்து சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் அனைவரும் கோடீஸ்வரர்கள்.
எம்.எல்.ஏக்களின் சொத்து மதிப்பு
அதன்படி ஒவ்வொரு எம்.எல்.ஏவுக்கும் தலா ரூ.10 கோடியே 90 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களும், குறைந்தபட்சமாக ரூ. 4 கோடியே 75 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களும் இருக்கிறதாம். கடந்த 2012ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தெர்தலில் வெற்றி பெற்ற ஏம்.எல்.ஏக்களின் சொத்து மதிப்பு ரூ.7 கோடியே 28 லட்சமாக இருந்துள்ளது.
சொத்துமதிப்பில் கட்சிகளின் பங்கீடு
கோவா தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 17 எம்.எல்.ஏக்கள் தல 12 கோடியே 17 லட்சமும் , பாஜகவைச் சேர்ந்த 13 எம்.எல்.ஏக்கள் தலா 11 கோடியே 53 லட்சமும், மஹாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியை சேர்ந்த ஏம்.எல்.ஏக்கள் தலா 9 கோடியே 35 லட்சமும், கோவா பார்வர்ட் கட்சி ஏம்.எல்.ஏக்கள் தலா 8 கோடியே 55 லட்சம் மதிப்புள்ள சொத்துக்கள் வைத்திருப்பது தெரியவந்துள்ளது.
கிரிமினல் வழக்குகள்
இந்த முறை கோவா சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற 40 ஏம்.எல்.ஏக்களில் 9 பேர் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள். இவர்கள் மீது பெண்களுக்கு எதிரான பயங்கர குற்றங்கள் பதிவாகியுள்ளன. கடந்த 2012ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட 40 ஏம்.எல்.ஏக்களில் 12 பேர் கிரிமினல் வழக்குகளின் தொடர்புடையவர்கள். மேலும் 6 பேர் மீது கொலை குற்றங்களும், 3 பேர் மீது பயங்கர குற்றங்கள் செய்ததாக வழக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.