வெயில்ல போராட்டம் நடத்தாதீங்க, கருத்துப் போயிருவீங்க, மாப்பிள்ளை கிடைக்காது.. ஒரு முதல்வரின் பேச்சு!
பனாஜி, கோவா: நர்ஸ்கள் வெயிலில் நின்று போராடுவதைக் கைவிட வேண்டும். அப்படிப் போராட்டம் நடத்தினால் கருத்துப் போய் விடுவீர்கள். பிறகு உங்களுக்கு மாப்பிள்ளை கிடைக்காது என்று பேசியுள்ளார் கோவா முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர்.
இந்தப் பேச்சுக்குக் கண்டனங்கள் எழுந்துள்ளன. ஆனால் தான் அப்படிப் பேசவில்லை என்று மறுத்துள்ளார் பர்சேகர்.
அரசியல்வாதிகளுக்கு இப்போது புதிதாக ஒரு வியாதி வந்துள்ளது. வாய்க்கு வந்ததைப் பேசுவதுதான் அது. அதுவும் பெண்களைப் பற்றி தாறுமாறாக பேசி வருகிறார்கள். அதைத் தட்டிக் கேட்க யாருமே இல்லாத நிலை.
மோடியின் அமைச்சர் ஒருவர் சோனியா காந்தி குறித்து இழிவாக கருத்துக் கூறியுள்ளார். இதுவரை அவரை கடுமையாக கண்டித்து ஒரு வார்த்தை அல்ல அல்ல.. ஒரு எழுத்து கூட பிரதமரிடமிருந்து வரவில்லை. இதுதான் இந்தியாவில் இன்று பெண்களுக்கு உள்ள மரியாதை என்ற அளவுக்கு நிலைமை ரொம்பக் கேவலமாக உள்ளது.
இப்போது கோவா முதல்வர் லட்சுமிகான்த் பர்சேகர் ஒரு கருத்தைச் சொல்லியுள்ளார். அவர் நர்ஸ்களைப் பற்றிப் பேசியுள்ளார். அந்த மாநிலத்தில் கடும் வெயிலையும் பாராமல் நர்ஸ்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தங்களது கோரிக்கைளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடக்கிறது.
கோரிக்கைகள் குறித்து தாங்கள் முதல்வரைச் சந்திக்கப் போனபோது குறித்து நர்ஸ் அனுஷா சாவந்த் என்பவர் கூறுகையில், முதல்வரிடம் எங்களிடம் பேசுகையில், வெயிலில் இப்படி நின்று நர்ஸ்கள் போராட்டம் நடத்தக் கூடாது. அப்படி நடத்தினால் நீங்கள் கருத்துப் போய் விடுவீர்கள். பிறகு உங்களுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைப்பது கஷ்டமாகி விடும் என்றார் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், இது அவருக்குத் தேவையில்லாதது. இப்படி பேசியது மரியாதைக்குறைவானது. எங்களது கோரிக்கை பற்றி மட்டுமே அவர் பேசியிருக்க வேண்டும். ஆனால் அவர் வேறு மாதிரியாகப் பேசியது வருத்தம் தருகிறது என்றார்.
ஆனால் அது போல தான் பேசவில்லை என்று பர்சேகரும், அவரது அலுவலகமும் மருத்துள்ளனர்.