கூகுளின் “நானோ டிகிரி” கோர்ஸ் - உதவித் தொகையுடன் படிக்க ஒரு அரிய வாய்ப்பு!
டெல்லி: இந்தியாவில் சாப்ட்வேர் டெவலப்பர்கள் திறமையை மேலும் அதிகப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஆன்ட்ராய்ட் நானோ டிகிரி கோர்ஸ் படிப்பை 1000 பேருக்கு ஸ்காலர்ஷிப்புடன் கூகுள் மற்றும் டாடா டிரஸ்ட் வழங்க உள்ளது.
இந்த புதிய வகுப்பினை இந்தியாவின் தலைசிறந்த இரண்டு நிறுவனங்களுடன் கைகோர்த்து ஆரம்பித்துள்ளது கூகுள்.
தகவல் தொழில்நுட்ப யுகத்தின் ஜாம்பவானாக திகழும் கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள், மற்றும் கூகுள் போனின் இயங்கு தளத்தை மேம்படுத்தும் நோக்கில் ஆப்ஸ் டெவலப்பர்களுக்கான இந்தப் பயிற்சி திட்டத்தினை நேற்று முதல் தொடங்கியுள்ளது.
அமெரிக்காவிலிருந்து வகுப்புகள்:
இவர்களுக்கான வகுப்புகளை அமெரிக்காவில் உள்ள அந்நிறுவனத்தின் பயிற்றுனர்கள் மேற்கொள்ள இருக்கிறார்கள்.
டாடா நிறுவனத்துடன் இணைவு:
இந்தியாவில் மென்பொருள் மேம்பாட்டு திறனை அதிகரிக்கும் வகையில் நானோடிகிரி கோர்ஸ் என்ற பெயரில் உடாசிட்டி மற்றும் இந்தியாவின் டாடா நிறுவனத்துடன் இணைந்து பயிற்சியளிக்க கூகுள் முடிவு செய்துள்ளது.
உதவித்தொகையும் உண்டு:
முதல் ஆயிரம் பேருக்கு மட்டும் உதவித்தொகையுடன் இந்த பயிற்சி அளிக்கப்படவுள்ளது. எனினும், மற்றவர்களுக்கு கட்டணம் இந்திய மதிப்பில் மாதம் சுமார் 9,800 ஆகும். எனினும் அவர்களும் இதில் 50 சதவீதத்தை பயிற்சி முடியும்போது திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலிடம் பிடிக்கும்:
சாப்ட்வேர் டெவலப்பர் அதிகம் உள்ள நாடுகளில் பட்டியலில், இந்தியா தற்போது இரண்டாம் இடத்தில் இருப்பதாகவும், 2018 ஆம் ஆண்டிற்குள் இப்பிரிவில் இந்தியா முதலிடம் பிடித்துவிடும் என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.