சென்னை மக்களே உங்களுக்காக... வெள்ள அபாயம் குறித்த புதிய அலர்ட்... கூகுள் அறிமுகம்!
டெல்லி: வெள்ள அபாயத்தை முன்கூட்டியே தெரிவிக்கும் புதிய அலர்ட் வசதியை கூகுள் அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் நாடு முழுவதிலும் உள்ள நதிகளின் நீர்மட்டத்தை மக்கள் அறிந்து கொள்ள முடியும்.
சென்ற ஆண்டு புயல் வருவதை முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் 'சைக்ளோன்' வசதியை அறிமுகம் செய்தது கூகுள் நிறுவனம். அதன் தொடர்ச்சியாக தற்போது வெள்ள அபாயம் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்து ஆபத்தை தவிர்க்கும் புதிய அலர்ட் வசதியை கூகுள் அறிமுகப்படுத்துகிறது.
இந்த அலர்ட் மூலம் நாடு முழுவதும் உள்ள நதிகளின் நீர்மட்டத்தை அறிய இயலும். அதோடு, வெள்ள பாதிப்புகள் குறித்து முன்கூட்டியே அறிந்து, மக்களை அப்பகுதியில் இருந்து வெளியேற்றிட முடியும்.
புதிய அப்ளிகேஷன்...
கூகுள் நவ் கார்ட்ஸ், கூகுள் ஆப்ஸ், கூகுள் மேப்ஸ் உள்ளிட்ட பல சேவைகளை வழங்கி உலகின் முன்னணி சர்ச் என் ஜினாக உள்ளது கூகுள் நிறுவனம். தற்போது தங்கள் சேவையின் அடுத்தகட்டமாக வெள்ள பாதிப்புகளை முன்கூட்டியே மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் புதிய அப்ளிகேஷனை அது வடிவமைத்துள்ளது.
மத்திய அரசுடன் இணைந்து...
இந்திய வெள்ள முன்னறிவிப்பு மையத்துடன் இணைந்து இந்தச் சேவையை மக்களுக்கு வழங்க உள்ளது கூகுள். இதன் மூலம், இந்தியாவில் 170 இடங்களில் ஆற்றின் நீர்மட்டம் குறித்த முக்கிய தகவல்களை உடனடியாக பெறலாம்.
இயற்கை பேரழிவுகள்...
இந்தப் புதிய வசதி குறித்து, கூகுள் இந்தியா நிறுவன உற்பத்தி மேலாளர் பயல் பட்டேல் கூறுகையில், ‘வானிலை ஆய்வு மையத்துடன் இணைந்து, புயல் குறித்த முன்னெச்சரிக்கைகளையும் வழங்க உள்ளோம். இயற்கை பேரழிவுகள் குறித்து முன் கூட்டியே அறிவதன் மூலம் பல உயிர்களை காப்பாற்ற முடியும் என்றார்
சென்னை வெள்ளம்...
சமீபத்தில் சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்கள் பெருமழை மற்றும் வெள்ளத்தால் பெரும் பாதிப்புகளைச் சந்தித்தன. அரசு தரப்பில் ஏற்பட்ட பல்வேறு குளறுபடிகளாலேயே சென்னை மக்கள் வெள்ளத்தில் சிக்கியதாக குற்றச்சாட்டு உள்ளது.
எச்சரிக்கை இல்லை...
உரிய நேரத்தில் எடுக்கத்தவறிய நடவடிக்கைகளால், என்ன நடக்கிறது என்பது புரியாமலேயே மக்கள் வெள்ளத்தின் போக்கில் இழுத்துச் செல்லப்பட்டனர். வழக்கம்போல் பெய்யும் மழை தான் என்ற நினைப்பில் இருந்தவர்களின் எண்ணத்தில் மட்டுமல்ல, வீடுகளிலும் வெள்ளத்தை அள்ளிக் கொட்டியது கனமழை.
சேதம்...
மழை, வெள்ளத்தில் சிக்கி கடந்த கால சேமிப்புகளை இழந்து, எதிர்காலத்தைக் கேள்விக்குறியோடு எதிர்நோக்கியுள்ள மக்கள் இன்னும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் வசித்து வருகின்றனர். உரிய நேரத்தில், பொறுப்பில் உள்ளவர்கள் தங்களது கடமையை உணர்ந்து சரியான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தால் உயிர்ப்பலி மற்றும் பொருட்சேதாரத்தைத் தவிர்த்திருக்கலாம்.
சிதம்பர ரகசியம்...
ஆனால், அது செய்யப்படாததின் விலையாக பலி கொடுக்கப்பட்டது மக்களின் வாழ்க்கை தான். சுனாமியை விட மோசமாக இந்த வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டனர். செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்பட்ட நீரின் அளவு இன்னமும் சிதம்பர ரகசியமாகவே இருக்கிறது.
எதிர்காலத்தில்...
இத்தகைய அச்சங்களில் இருந்து வருங்காலத்தில் தப்பிப்பதற்கு கூகுளின் இந்த செயலி பெரிதும் உதவியாக இருக்கும் என நம்பலாம்.
துல்லியமான எச்சரிக்கை...
இந்த அலர்ட் மூலம் வெள்ளம் போன்ற பேரிடர் ஏற்பட்டால் அதிகாரிகளை முந்திக் கொண்டு மக்களுக்கு எச்சரிக்கை செய்ய முடியும். அதுமட்டுமின்றி, பேரிடர் நேரத்தில் மக்கள் சம்பவ இடத்தை விட்டு வெளியேறுவதற்கு துல்லியமான தகவல்களையும், வழிமுறைகளையும் இது வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல் பரிமாற்றம்...
அதேபோல், சென்னை மழை,வெள்ளத்தின் போதும், மணிப்பூர் நிலநடுக்கத்தின் போதும் தங்களின் பாதுகாப்பு குறித்து, தங்களின் உறவினர்களுடன் தகவல் பகிர்ந்து கொள்வதற்காக பேஸ்புக் நிறுவனம் புதிய பக்கம் ஒன்றை துவங்கி உதவி புரிந்தது. அதனைப் போன்றே, இயற்கை பேரிடர் பாதிப்புகளில் சிக்கிய தங்களின் நிலை குறித்து உறவினர்களுக்கு தகவல் அளிக்கும் வசதி கொண்டதாகவும் இந்த அப்ளிகேஷனை கூகுள் வடிவமைத்துள்ளது.
வெள்ள பாதிப்பே அதிகம்...
இந்தியாவில் பல்வேறு வகையான இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு இருந்தாலும் பெரும்பாலும் வெள்ள பாதிப்பே அனைவரையும் பாதிக்கிறது. சராசரியாக ஆண்டுதோறும் 3 கோடி பேர் இந்தியாவில் வெள்ளத்தால் பாதிப்புக்கு உள்ளாவதாக கூறப்படுகிறது.
பயிர்கள் சேதம்...
மத்திய அரசின் மத்திய நீர் ஆணையத்தின் (சி.டபிள்யூ.சி) தகவலின்படி, ஆண்டுதோறும் சராசரியாக 7.21 மில்லியன் எக்டேர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படுகின்றன. பயிர்கள் சேதமடைவதால் ஆண்டுதோறும் ரூ.1,118 கோடி இழப்பு ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் விவரங்களுக்கு:
http://googleindia.blogspot.co.uk/2016/02/flood-alerts-now-available-for-india.html