சர்ச்சைக்குரிய "நிர்பயா" ஆவணப்படம்- 'யு டியூப்'பிலும் நீக்க மத்திய அரசு நடவடிக்கை
டெல்லி: பி.பி.சி. ஒளிபரப்பிய சர்ச்சைக்குரிய ‘இந்தியாவின் மகள்' என்ற நிர்பயா குறித்த ஆவணப்படத்தை யு டியூப் இணையதளத்திலும் நீக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
டெல்லியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த நிர்பயா சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட ஆவணப் படத்தை ஒளிபரப்ப இந்தியா தடை விதித்திருந்தது. ஆனால் இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் பி.பி.சி. தொலைக்காட்சி இந்த ஆவணப் படத்தை ஒளிபரப்பியது.
இதற்கு விளக்கம் கேட்டு மத்திய அரசு பி.பி.சி.க்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில் யு டியூப் இணையதளத்திலும் இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டது.
தற்போது இந்த ஆவணப்படத்தை நீக்க வேண்டும் வேண்டும் என்று யு டியுப்' நிர்வாகத்திடம் மத்திய அரசு கூறி உள்ளது.
யு டியுப் நிறுவனத்திடம் மத்திய அரசின் சார்பில், தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சகம் பேசி உள்ளதாக கூறப்படுகிறது.