பாகிஸ்தானுக்கு புகழாரம்: காஷ்மீர் முதல்வர் கருத்தில் மத்திய அரசுக்கு உடன்பாடு இல்லை-ராஜ்நாத்சிங்
டெல்லி: காஷ்மீர் முதல்வர் முஃப்தி முகமது சையதின் பாகிஸ்தான் குறித்த கருத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மறுப்பு தெரிவித்துள்ளார்.
காஷ்மீரில், மக்கள் ஜனநாயக கட்சி-பாஜக கூட்டணி ஆட்சியமைத்துள்ளது. மக்கள் ஜனநாயக கட்சியின் முப்தி முகமது சையது முதல்வராக பதவியேற்றுள்ளார். நேற்று முதல்வர் பதவியேற்கும் விழா நடைபெற்றது.
இதன்பிறகு நிருபர்களிடம் பேசிய முப்தி முகமது சையது, "காஷ்மீரில் தேர்தல் அமைதியாக நடைபெற, எல்லைக்கு அப்பால் உள்ள மக்கள் (பாகிஸ்தான்) மற்றும் அவர்களது சொத்துக்களான ஹுரியத் (பிரிவினைவாதிகள்), தீவிரவாதிகள் ஆகியோர் காரணமாகும். அவர்கள் நினைத்திருந்தால், தேர்தல் அமைதியாக நடைபெற்று, ஜனநாயக முறைப்படி தேர்தல் நடைபெற்றிருக்காது" என்றார்.
காஷ்மீரில் தேர்தலை புறக்கணிக்குமாறு பிரிவினைவாதிகள் விடுத்த கோரிக்கையை, அம்மாநில மக்கள் புறக்கணித்தது, எல்லையில் ராணுவத்தினர் தீவிரமாக கண்காணித்து தீவிரவாதிகளை ஊடுருவவிடாமல் செய்தது போன்றவைதான் தேர்தல் சிறப்பாக நடந்து முடிய காரணம் என்று கூறப்பட்டு வந்த நிலையில், காஷ்மீரின் முதல்வரே இப்படி ஒரு கருத்தை கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.
நாடாளுமன்றத்திலும் இந்த பிரச்சினை இன்று எதிரொலித்தது. மக்களவையில் இன்று, எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் "ஜம்மு காஷ்மீர் முதல்வர் கூறிய கருத்தில் எங்கள் அரசுக்கும், பாஜகவுக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது. தேர்தல் சிறப்பாக நடைபெற்று முடிந்ததற்கு, தேர்தல் ஆணையம், பாதுகாப்பு படை, காஷ்மீர் மக்கள் ஆகியோர்தான் பொறுப்பாகும்" என்றார்.
ஆனால் பிரதமர் இந்த விஷயத்தில் மவுனம் கலைக்க வேண்டும் என்று காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷமிட்டனர். பிரதமரிடம் கலந்து ஆலோசித்துவிட்டுதான், நான் இந்த அறிக்கையை வாசித்தேன் என்று ராஜ்நாத்சிங் பதில் அளித்தார். ஆனால் ராஜ்நாத்சிங் பதிலில் திருப்தியடையாத காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.