டக்வொர்த் விதிக்கு பிறகு உங்களை அதிகம் குழப்புவது ஜிஎஸ்டிதானா? அப்போ இந்த 'ஆப்' உங்களுக்குத்தான்
சரக்கு மற்றும் சேவை வரி குறித்த விவரங்களை அறிந்து கொள்வதற்காக மத்திய அரசு சார்பில் புதிய மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி : ஜிஎஸ்டி குறித்து விவரங்களை அறிந்து கொள்ள புதிய மொபைல் ஆப்பை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
நாடு முழுவதும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் வரி தொடர்பாக வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் ஜிஎஸ்டி குறித்து சந்தேகம் ஏற்பட்டு வந்த வண்ணம் இருந்தது.
இந்த வரி தொடர்பாக ஏற்படும் பல்வேறு குழப்பங்களுக்கு பதில் அளிக்கும் வகையில், மத்திய சுங்கம் மற்றும் கலால் துறை வாரியம் சார்பில் ஜிஎஸ்டி மொபைல் ஆப் ஜிஎஸ்டி ரேட் ஃபைன்டர்(GST Rate Finder) என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.
ஜிஎஸ்டி மொபைல் ஆப், வாடிக்கையாளர்கள்,வர்த்தகர்கள்,மாணவர்கள் அனைவருக்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் எங்கு இருந்தாலும் இந்த ஆப் ஜிஎஸ்டி குறித்து விவரங்களை அறிந்து கொள்ள ஆப்பில் வசதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஆன்ட்ராய்டு போன்களில் மட்டும் கிடைக்கும் இந்த செயலி, விரைவில் ஆப்பிள் போன்களிலும் பயன்படுத்த வசதி ஏற்படுத்தப்படும் என்று நிதித்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இதே போன்று பொருட்களின் விலை நிலவரங்களை மத்திய சுங்கம் மற்றும் கலால் துறையின் ஜிஎஸ்டி இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மாநில வரி(SGST), மத்திய வரி(CGST), யூனியன் பிரதேசங்களின் வரி(UGST) உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வரி செலுத்துவோர் தெரிந்து கொள்ளலாம் என்று நிதித்துறை அமைச்சகம் கூறியுள்ளது.