வெளிநாட்டு நிதி பெற 12 தமிழக தொண்டு நிறுவனங்கள் உட்பட 69 அமைப்புகளுக்கு தடை!
டெல்லி: வெளிநாடுகளில் இருந்து நிதி பெறுவதற்கு தமிழகத்தைச் சேர்ந்த 12 தொண்டு நிறுவனங்கள் உள்பட 69 அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக லோக்சபாவில் மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று கூறியதாவது:
ஆந்திரத்தைச் சேர்ந்த 14 தொண்டு நிறுவனங்கள், தமிழகத்தைச் சேர்ந்த 12 நிறுவனங்கள்,
குஜராத், ஒடிஷா மாநிலங்களைச் சேர்ந்த தலா 5 நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி பெற தடை விதிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கேரள மாநிலங்களைச் சேர்ந்த தலா 4 நிறுவனங்கள், டெல்லியைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
இந்தியாவில் உள்ள தொண்டு நிறுவனங்கள் ஆண்டுக்கு ரூ10 ஆயிரம் கோடி அளவுக்கு 150 நாடுகளில் இருந்து நிதி உதவியைப் பெறுகின்றன. இத்தகைய நிதி உதவி பெறும் தொண்டு நிறுவனங்கள் பல்வேறு அரசுக்கு எதிரான போராட்டங்களின் பின்னணியில் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இதனைத் தொடர்ந்து மத்திய அரசு வெளிநாட்டு நிதி பெறும் தொண்டு நிறுவனங்களைக் கண்காணித்து இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.