10 வயது பேத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை… 66 வயது தாத்தா கைது… போலீசார் தீவிர விசாரணை
10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த பாதகத்தைச் செய்த 66 வயது முதியவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கொல்லம்: கேரள மாநிலத்தில் கடந்த 9 ஆண்டுகளில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை 3 மடங்கு அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கேரளா பாதிரியார் ஒருவர் சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி கர்ப்பிணியாக்கிய சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கடந்த 9 ஆண்டுகளில் கேரளாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் ரீதியான வன்கொடுமைகள் 3 மடங்கு அதிகரித்துள்ளதாக மேலும் ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
அதிகரிக்கும் பாலியல் தொல்லை
கேரள மாநில காவல் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 2007ம் ஆண்டு 500 பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் பதிவான நிலையில் 2016ம் ஆண்டு அது 1,644 ஆக உயர்ந்துள்ளது. சிறுவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 2013ம் ஆண்டில் 1,002 ஆக இருந்த நிலையில், 2016ம் ஆண்டு அது 2,093 ஆக உயர்ந்துள்ளது.
10 வயது சிறுமி
இந்நிலையில், மீண்டும் ஒரு கொடூரம் கேரள மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள குண்டறா பகுதியை சேர்ந்தவர் ஜோஸ். இவரது மனைவி ஷீஜா. இந்த தம்பதியின் மகள் அனிலா. 10 வயதான இவர், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.
தூக்கு போட்டு தற்கொலை
பள்ளி பருவ மாணவியான அனிலா கடந்த ஜனவரி மாதம் தனது வீட்டில் ஜன்னல் கம்பியில் திடீரென தூக்குபோட்ட நிலையில் பிணமாக தொங்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் இதுபற்றி போலீசில் புகார் செய்தனர். போலீசார், மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாலியல் பலாத்காரம்
டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்ததில் அனிலா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் தெரிய வந்தது. இதைதொடர்ந்து போலீசார் இந்த வழக்கின் விசாரணையில் தீவிரம் காட்டினார்கள். ஆனால் நாளடைவில் அந்த வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டது.
பொதுமக்கள் போராட்டம்
இதற்கிடையில், மாணவி அனிலா மரணம் பற்றி விசாரிப்பதில் போலீசார் மெத்தனம் காட்டி வந்ததைக் கண்டித்தும், விரைந்து விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்த வழக்கின் விசாரணை மீண்டும் சூடுபிடித்தது.
சொந்த தாத்தா கொடூரம்
மாணவி அனிலாவின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது இந்த வழக்கில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அனிலாவின் தாய் ஷீஜாவிடம் போலீசார் விசாரித்த போது தனது தந்தை விக்டர்டேனியல் (66) தான் அனிலாவை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று ஒப்புக் கொண்டார்.
பிணமானது எப்படி?
மேலும், வீட்டில் யாரும் இல்லாத நேரத்திலும், பள்ளி விடுமுறை நாட்களிலும் அனிலாவை விக்டர்டேனியல் மிரட்டி பலமுறை பலாத்காரம் செய்துள்ளது தெரிய வந்தது. அதன் பிறகே அனிலா வீட்டில் பிணமாக தொங்கியுள்ளார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது மர்மமாகவே உள்ளது.
தீவிர விசாரணை
பேத்தி அனிலாவை பாலியல் பலாத்காரம் செய்த தாத்தா விக்டர் டேனியலை போலீசார் உடனடியாக கைது செய்து விசாரித்து வருகின்றனர். சொந்த பேத்தியையே தாத்தா பாலியல் பலாத்காரம் செய்த இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.