'லிப்ஸ்டிக்' வெடிகுண்டு மிரட்டல்.. 13 மணி நேரம் தாமதமாக கிளம்பியது துருக்கி விமானம்
டெல்லி: தாய்லாந்து தலைநகர் பேங்காக்கிலிருந்து துருக்கி தலைநகர் இஸ்தான்புல் நோக்கி சென்ற துருக்கி நாட்டு விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக வெளியான மிரட்டலை தொடர்ந்து டெல்லி ஏர்போர்ட்டில் விமானம் சல்லடையாக சோதித்து பார்க்கப்பட்டது. வெடிகுண்டு இல்லை என்று தெரிந்த பிறகு 13 மணி நேரம் கழித்து, இன்று அதிகாலையில்தான் விமானம் புறப்பட்டது.
இந்திய வான் எல்லை
பேங்காக்கில் இருந்து 144 பயணிகள் மற்றும் 13 விமான பணியாட்களுடன், இஸ்தான்புல்லுக்கு நேற்று மதியம், தர்கிஷ்ஏர்லைன்ஸ் விமானம் சென்று கொண்டிருந்தது. அந்த விமானம் இந்திய வான் எல்லையில், மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் விமான கட்டுப்பாட்டு பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது, பைலட்டுக்கு ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
லிப்ஸ்டிக் மிரட்டல்
"இந்த விமானத்தின், சரக்கு வைக்கும் பகுதியில் வெடிகுண்டு உள்ளது" என்று விமான பாத்ரூம் கண்ணாடியில், லிப்ஸ்டிக்கில் யாரோ எழுதிவைத்துள்ளனர். இதுகுறித்த தகவல்தான் பைலட் காதுக்கு எட்டியது., பதற்றமடைந்த பைலட் விமான கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் கொடுத்தார். நாக்பூர் விமான கட்டுப்பாட்டு அலுவலக அதிகாரிகள், உடனடியாக, விமானத்தை டெல்லி விமான நிலையத்தில் தரையிறக்குமாறு அறிவுறுத்தினர்.
தரையிறக்கம்
எனவே விமானம், டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையில் நேற்று மதியம் 1.34 மணிக்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்களின் கட்டுப்பாட்டின்கீழ், விமான நிலையம் கொண்டுவரப்பட்டது. வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் சல்லடை போட்டு விமானத்தை சோதித்து பார்த்தனர். ஆனால், குண்டு கிடைக்கவில்லை.
ரொம்ப தாமதம்
இதையடுத்து பயணிகள் ஒவ்வொருவரிடமும் துருவி துருவி விசாரணை நடைபெற்றது. இருப்பினும் எழுதியது யார் என்பது பற்றி துப்பு கிடைக்கவில்லை. இந்த நடைமுறைகள் காரணமாக, இன்று அதிகாலை 3 மணி 16 நிமிடங்கலுக்குதான் விமானம் இஸ்தான்புல் நோக்கி புறப்பட்டது. இதனால் பயணிகள் கடும் மன உளைச்சலுக்கும், உடல் சோர்வுக்கும் ஆளாகினர்.