ஜி.எஸ்.டி. மசோதாவில் எதிர்க்கட்சிகளின் திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) மசோதாவில் 1% கூடுதல் வரியை ரத்து செய்வது, மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் திருத்தங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
அனைத்து மறைமுக வரிகளுக்கும் மாற்றாக, சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பான அரசியல் சட்ட திருத்த மசோதா, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் லோக்சபாவில் நிறைவேறியது.
ஆனால், ராஜ்யசபாவில் இன்னும் நிறைவேறவில்லை. இதனால், இந்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி அமல்படுத்த திட்டமிட்டிருந்த ஜி.எஸ்.டி. வரியை இன்னும் அமல்படுத்த முடியவில்லை.
இதனால் மாநில அரசுகளுடன் மத்திய அரசு ஆலோசனை கூட்டத்தில் கருத்து ஒற்றுமை ஏற்பட்டது. இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் ஏற்கனவே லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட ஜி.எஸ்.டி. மசோதாவில் திருத்தங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- மாநிலங்களுக்கிடையே பொருட்களை கொண்டு செல்லும்போது அப்பொருட்களின் மீது சம்பந்தப்பட்ட மாநிலம், ஜி.எஸ்.டி. வரிக்கு மேல் கூடுதலாக 1% வரியை விதிக்க வகை செய்யப்பட்டு இருந்தது. இந்த கூடுதல் வரியை ரத்து செய்வது
- ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்துவதால் மாநிலங்களுக்கு ஏதேனும் வருவாய் இழப்பு ஏற்பட்டால் அதை ஈடுகட்ட 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு அளிப்பது
- ஜி.எஸ்.டி. வரி அமல் தொடர்பாக மத்திய-மாநில அரசுகளுக்கிடையே சர்ச்சை ஏற்பட்டால் அதை மத்திய-மாநில அரசுகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஜி.எஸ்.டி. கவுன்சில் மூலம் தீர்வு காண்பது
என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த திருத்தங்களுடன் புதிய ஜி.எஸ்.டி. மசோதா ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் ஒரு கோரிக்கையான 1% வரி ரத்து ஏற்கப்பட்டுள்ளதாலும், மாநிலங்களுடன் கருத்து ஒற்றுமை ஏற்பட்டுள்ளதாலும் மசோதா நிறைவேறி விடும் என்று மத்திய அரசு கருதுகிறது.
ராஜ்யசபாவில் நிறைவேறிய பிறகு இந்த திருத்த மசோதா லோக்சபாவில் மீண்டும் நிறைவேற்றப்படும். பின்னர் இந்த மசோதாவுக்கு பாதிக்கு மேற்பட்ட மாநிலங்களின் சட்டசபைகள் ஒப்புதல் அளிக்க வேண்டும். இவை அனைத்தும் முடிந்த பிறகு அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஜி.எஸ்.டி. வரியை அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.