சரக்கு- சேவை வரி மசோதா: மத்திய அரசுக்கு திரிணாமுல் காங். திடீர் ஆதரவு!
டெல்லி: ஜி.எஸ்.டி. எனப்படும் ஒரே சீரான சரக்கு, சேவை வரி மசோதாவை நிறைவேற்ற ஆதரவளிப்போம் என திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துள்ளது மத்திய அரசுக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ், அ.தி.மு.க மற்றும் இடதுசாரிகள் இந்த மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
மத்திய உற்பத்தி வரி, மதிப்பு கூட்டு வரி, சுங்க வரி, நுழைவு வரி, ஆடம்பர வரி உள்ளிட்ட அனைத்து வரிகளும் நீக்கப்பட்டு ஜி.எஸ்.டி. எனப்படும் ஒரே சீரான சரக்கு மற்றும் சேவை வரியை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிடப்பட்டுள்ளது. இது மாநிலங்களின் வருவாயை பாதிக்கும் எனக் கூறி பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அதே நேரத்தில் மேற்கு வங்கம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்கள் ஆதரவும் தெரிவிக்கின்றன.
இந்த ஜி.எஸ்.டி. மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் டெரெக் ஓ பிரையன் கூறியுள்ளார். இம்மசோதா ஏற்கெனவே நிலைக் குழு, தேர்வுக் குழு ஆகியவற்றுக்கு அனுப்பி வைக்கப்பட்டதுதான்.. இதனால் மீண்டும் நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டிய தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் எங்களது தேர்தல் அறிக்கைகளில் தொடர்ந்து ஜி.எஸ்.டி.யை ஆதரித்தும் வருகிறோம்.. இதனால் இந்த மசோதாவை நிறைவேற்ற ஆதரவு தெரிவிக்கிறோம் என்றார்.
கடந்த ஏப்ரல் 26-ந் தேதியன்று ஜி.எஸ்.டி. மசோதாவை நாடாளுமன்ற லோக்சபாவில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த போது, இதனை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று சோனியா காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. அப்போது திரிணாமுல் காங்கிரசும் வெளிநடப்பு செய்திருந்தது. அதே நேரத்தில் இம்மசோதாவை எதிர்க்கும் அ.தி.மு.க, பிஜூ ஜனதா தளம் ஆகியவை வெளிநடப்பு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.