ஏமண்டி... இக்கட சூடண்டி....திருப்பதி லட்டுக்கு ஜிஎஸ்டி வரி கிடையாதாம்!
திருப்பதி ஏழுமலையான் லட்டுக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் முடி, லட்டு மீது அறிவிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஆந்திர நிதியமைச்சர் எனபலா ராமகிருஷ்ணன் விஜயவாடாவில் அறிவித்துள்ளார்.
தங்கும் அறையின் வாடகை ரூ.1000க்கு மேல் 12% வரி விதிக்கப்படும் என்று ஆந்திர அமைச்சர் கூறியுள்ளார்.
திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்காக குறைந்த விலையில் வாடகை அறை, மானிய விலையில் லட்டு, அன்னதானம் ஆகியவற்றை வழங்கி வருகிறது.
ஜிஎஸ்டி வரி
சரக்கு மற்றும் சேவை வரி நாடு முழுவதும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த வரி விதிப்பால், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட், பிரசாதங்கள் மற்றும் அறை வாடகை உயரும் நிலை ஏற்பட்டது.
ஆந்திரா நிதியமைச்சர்
மாநில நிதியமைச்சர்கள் பங்கேற்ற 17வது ஜிஎஸ்டி கூட்டம் டெல்லியில் 18ஆம் தேதி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற ஆந்திர மாநில நிதியமைச்சர் திருப்பதி ஏழுமலையான கோவிலின் சேவைகளுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனைப் பரிசீலித்த ஜி.எஸ்.டி. கவுன்சில் லட்டு பிரசாதத்திற்கும், முடி காணிக்கைக்கும் விலக்கு அளிக்க தீர்மானித்துள்ளது.
ஜிஎஸ்டி வரி விலக்கு
ஆனால் திருப்பதி லட்டு மற்றும் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று ஆந்திர மாநில நிதி அமைச்சர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.
அறை வாடகைக்கு வரி
இதனையடுத்து திருப்பதி லட்டு மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், முடி காணிக்கை வருமானம் ஆகியவற்றிற்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனால் கோவில் நிர்வாகமும், பக்தர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். அதே நேரத்தில் தங்கும் அறையின் வாடகை ரூ.1000க்கு மேல் 12% வரி விதிக்கப்படும் என்று ஆந்திர அமைச்சர் கூறியுள்ளார்.