முடிவு எட்டப்படாமல் முடிந்தது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்
டெல்லி: டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முடிவு ஏதும் எடுக்கப்படாமல் டிசம்பர் 11ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விதிப்பு முறையை ஏப்ரல் 1, 2017-ம் ஆண்டிலிருந்து அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.
அதை நடைமுறைக்கு கொண்டு வருவதிலுள்ள அம்சங்கள் குறித்து ஆலோசிக்க மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் மாநில நிதி அமைச்சர்கள் பங்குபெற்ற ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்றது. அதில் சில அம்சங்கள் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படாததால் அக்கூட்டம் நவம்பர் 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இந்த கூட்டம் டிசம்பர் 2 மற்றும் மூன்றாம் தேதிகளில் நடைபெறும் என்று மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி தலைமையில் டெல்லியில் நேற்று ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இன்று காலையில் மீண்டும் கூட்டம் தொடங்கியது. திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரைவு மசோதா கவுன்சில் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
திருத்தப்பட்ட வரைவு ஜிஎஸ்டி சட்டம், ஐஜிஎஸ்டி சட்டம், ஜிஎஸ்டி இழப்பீட்டு சட்டம் ஆகியன மத்திய உற்பத்தி மற்றும் சுங்க வரி வாரியத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டங்கள் குறித்து தற்போது நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் கூட்டத்தில் சுமுக முடிவு எட்டப்படவில்லை. எனவே, ஜிஎஸ்டி கவுன்சலின் அடுத்த கூட்டம் டிசம்பர் 11 மற்றும், 12ம் தேதிகளில் நடைபெறும் என கூறி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.