ஜிஎஸ்டி எபெக்ட்... திருப்பதியில் தங்கும் அறைகளின் வாடகை கிடுகிடு உயர்வு- பக்தர்கள் 'ஷாக்'
ஜிஎஸ்டி அமலானதால் திருப்பதியில் தங்கும் அறைகளின் வாடகை உயர்ந்துள்ளது. இதனால் பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பதி: ஜிஎஸ்டி அமலானதால் திருப்பதியில் தங்கும் அறைகளின் வாடகை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது பக்தர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
நாடு முழுவதும் ஒரே வரி விதிப்பு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் கடந்த 1-ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி விதிப்பு அமல் செய்யப்பட்டது. இதன் மூலம் எந்தெந்த பொருள்களுக்கு வரி, எந்தெந்த பொருள்களுக்கு வரி விலக்கு என்பது குறித்து செயலி மூலம் தெரிந்து கொள்ள மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி திருப்பதியில் பக்தர்கள் தங்கும் அறை, திருமணம், தங்க டாலருக்கான கட்டணமும் இன்று முதல் உயர்ந்துள்ளது. அறையை பொருத்தமட்டில் ரூ.1000 முதல் ரூ.2000 வரையிலான தங்கும் விடுதிக்கு ஜிஎஸ்டி 12% வசூலிக்கப்படும். மேலும் ரூ.2500-க்கு மேல் வாடகை உள்ள விடுதிக்கு ஜி.எஸ்.டி. வரி 18% வசூலிக்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இந்த விகிதத்தை வைத்து கணக்கிட்டால் ரூ. 1500 வசூலிக்கப்பட்ட அறை வாடகை இனி ரூ.1700 ஆக உயர்ந்துள்ளது. கோயில் மண்டபத்தில் நடைபெறும் திருமணங்களுக்கு ரூ.10 ஆயிரத்துடன் 12 சதவீத வரி வசூலிக்கப்படுகிறது. திருப்பதியில் விற்கப்படும் தங்க டாலர் மீது கூடுதலாக 3 சதவீத வரி விதிக்கப்படுகிறது.
இதனால் பக்தர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் லட்டுக்கு வரி விலக்கு அளித்தது பக்தர்களுக்கு சற்று ஆறுதலாக உள்ளது.