இந்தியா புதிய விதியை எழுதிக்கொண்டிருக்கிறது: அருண் ஜேட்லி பேச்சு #GSTForNewIndia
டெல்லி: ஜி.எஸ்.டி வரி விதிப்பால் இந்திய புதிய விதியை எழுதிக் கொண்டிருக்கிறது என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை அமல்படுத்தும் விதமாக சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி இன்று நள்ளிரவு முதல் அமல்படுத்தப்படுகிறது. இதற்கான அறிமுக விழா நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடந்து வருகிறது. இந்த விழாவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, மத்திய அமைச்சர்கள், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
ஜி.எஸ்.டி. அறிமுக விழாவில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி பேசியதாவது: ஜிஎஸ்டி வரியால் இந்திய ஒரே நாடு, ஒரே வரி, ஒரே தேசம் என மாறப்போகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து குறிக்கோளை எட்டியுள்ளன. 2003ல் வாட் என்ற ஒற்றை வரி நடைமுறை தொடங்கியது. ஜி.எஸ்.டி. வரி மூலம் மறைமுக வரி முடிவுக்கு வரும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்பட ஜிஎஸ்டி வரி விதிப்பு உதவும்.
ஜிஎஸ்டி வரி அமலாவதில் அனைத்து மாநிலங்களின் பங்களிப்பு உள்ளன. 8 முறை ஜிஎஸ்டி கூட்டம் நடைபெற்றுள்ளது. ஆனால் இதுவரை ஒரு முறை கூட வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இதன் மூலம் இந்தியாவில் புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.