குஜராத்தில் அரசு பஸ் ஆற்றில் கவிழ்ந்து 37 பேர் பலி: 24 பேர் படுகாயம் !
சூரத்: குஜராத் மாநிலத்தில் அரசு பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 37 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 24 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குஜராத் மாநில அரசு பஸ் 60-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சூரத் அருகில் உள்ள நவ்சாரியில் இருந்து இன்று மாலை உகாய் நோக்கி புறப்பட்டுச் சென்றுகொண்டிருந்தது. சிறிது நேரத்தில், பூர்ணா ஆற்றுப் பாலத்தில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த கோர விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 37 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினரும், மீட்புப் படையினரும் மீட்பு நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். படுகாயத்துடன் மீட்கப்பட்ட 20 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக நவ்சாரி மாவட்ட ஆட்சியர் ரம்யா மோகன் தெரிவித்துள்ளார்.
பலர் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. ஆற்றில் தண்ணீர் அளவுக்கு அதிகமாக செல்வதால் மீட்புப் பணி சவாலாக இருப்பதாக மீட்புப் படையினர் கூறியுள்ளனர்.