காங்கிரஸுடன் கை கோர்த்த படேல்கள்... பாஜகவுக்கு அக்னி பரீட்சையாக குஜராத் உள்ளாட்சித் தேர்தல்
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் நடைபெற்று வரும் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளை நினைத்து கதிகலங்கிக் கிடக்கிறது பா.ஜ.க. இந்த தேர்தல் முடிவுகள் ஆனந்திபென்னின் அரசியல் எதிர்காலத்தையும் மட்டுமல்ல... 2017ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும் என்பதால் பா.ஜ.க.வினர் அதிர்ச்சியுடன் தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர்.
லோக்சபா தேர்தலில் வென்று மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. இதற்கு மோடி அலைதான் காரணம் என பிரசாரம் செய்யபட்டது. ஆனால் டெல்லி, பீகார் சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.க. மரண அடி வாங்கியது. இதனால் மோடி அலை என்பதெல்லாம் முடிந்து போன கதை என்றாகிவிட்டது.
இந்த தொடர் தோல்விகளுக்கு மத்தியில் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் தற்போது உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொண்டிருக்கிறது. குஜராத் மாநிலத்தில் அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட், ஜாம்நகர் மற்றும் பாவ்நகர் என 6 மாநகராட்சிகள், 31 மாவட்ட பஞ்சாயத்துகள், 56 நகராட்சிகள், 230 தாலுகா பஞ்சாயத்துகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் டிசம்பர் 2-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
குஜராத்தில் ஆளும் பா.ஜ.க. அரசு, உள்ளாட்சித் தேர்தலை எப்படியாவது ஒத்திவைத்துவிட வேண்டும் என்பதில் படுதீவிரமாக இருந்தது. இதற்கு காரணம் இடஒதுக்கீடு கொடு அல்லது இடஒதுக்கீட்டை அழி என்ற படேல்களின் உக்கிரமான போராட்டம்தான்.
பா.ஜ.கவில் படேல்கள்
படேல்களைப் பொறுத்தவரையில் அவர்கள்தான் குஜராத்தில் பா.ஜ.கவை ஆட்சியில் அமர்த்தியவர்கள்... அம்மாநிலத்தில் சுமார் 12 முதல் 15% பேராக இருந்தாலும் பெரும்பான்மையினரோ பா.ஜ.க. ஆதரவாளர்களாக இருந்தவர்கள். அம்மாநில முதல்வர் ஆனந்திபென், மாநில பா.ஜ.க. தலைவர் ஆர்.சி. ஃபால்டு, 7 அமைச்சர்கள், 6 எம்.பி.க்கள், 42 எம்.எல்.ஏக்கள் படேல் சமூகத்தினர்தான்...
இடஒதுக்கீடு போராட்டம்
ஆனால் படேல்களின் இடஒதுக்கீட்டு போராட்டத்தை மிகக் கடுமையாக ஒடுக்கியது குஜராத் பா.ஜ.க. அரசு. இந்த போராட்டத்தில் மொத்தம் 10 பேர் உயிரிழந்து போயுள்ளனர்.
படேல் சமூகத் தலைவர் ஹர்திக் படேல் மீது தேசதுரோக வழக்கு பாய்ந்துள்ளது. இதனால் ஆளும் பா.ஜ.க. அரசு மீது உச்சகட்ட கோபத்தில் இருக்கின்றனர் படேல் சமூகத்தினர்...
ஆதரித்த காங்கிரஸ்
தற்போது படேல் சமூகத்துக்கு முழு ஆதரவு அளித்து நிற்கிறது காங்கிரஸ் கட்சி. உச்சநீதிமன்றத்தில் ஹர்திக் படேலுக்காக காங். மூத்த தலைவர் கபில் சிபல் ஆஜராகி வாதாடியிருந்தார்.
ஒத்திவைப்பு நாடகம்
இப்படி 'கள நிலவரம்' நமக்கு சாதகமாக இல்லையே என கருதிய குஜராத் பா.ஜ.க. அரசு உள்ளாட்சித் தேர்தலையே ஒத்திப் போடுகிற வேலையில் மும்முரம் காட்டியது. படேல் சமூகத்தின் போராட்டத்தை சுட்டிக் காட்டி மாநிலத்தில் சட்டம்- ஒழுங்கு மோசமாக இருப்பதால் உள்ளாட்சித் தேர்தலை தாமதமாக நடத்துவதற்கான அவசர சட்டத்தையும் பிறப்பித்தது குஜராத் அரசு. அத்துடன் நவம்பர் மாதம் பதவி காலம் முடியும் உள்ளாட்சித் தலைவர் இடங்களுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமிப்பதற்கும் குஜராத் அரசு தயாராகி வந்தது. அப்போதுதான் நீதிமன்றம் மூலம் பேரிடி விழுந்தது.
குட்டு வைத்த ஹைகோர்ட்
உள்ளாட்சித் தேர்தலை தாமதமப்படுத்தும் குஜராத் அரசுக்கு எதிராக அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பயங்கரவாத சம்பவங்கள் நடக்கிற ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலேயே உரிய காலத்தில் தேர்தல்கள் நடைபெறும் போது, எந்த குஜராத்தில் தேர்தலை ஒத்திவைப்பதற்கு எந்த ஒரு காரணமுமே இல்லையே என மாநில அரசை சாடியது. அதேபோல் உள்ளாட்சித் தேர்தலில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்ற மாநில அரசின் சடத்துக்கு எதிரான வழக்கிலும், வாக்களிப்பது என்பது நாட்டு மக்களின் உரிமை; அதை கட்டாயமாக்க முடியாது என்று அதிரடி காட்டியது. உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடிகளைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்கு அவசரகால சட்டத்தை மாநில தேர்தல் ஆணையம் உடனடியாக நீக்கி உள்ளாட்சித் தேர்தல்
தாமரை அலர்ஜி
தற்போது உள்ளாட்சித் தேர்தல்கள் பல கட்டங்களாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்தத் தேர்தில் பா.ஜ.க.வின் தாமரை சின்னத்தை கண்டாலே அலர்ஜி கண்டவர்களாக ஒதுங்கிப் போகின்றனர் படேல் சமூகத்தினர். பா.ஜ.க.வில் உள்ள படேல் சமூகத்தினரும் கூட அக்கட்சியில் 'தாமரை' சின்னத்தில் போட்டியிட்டால் ஓட்டு கிடைக்காதே என புலம்பி வருகின்றனர். பெரும்பாலான படேல் சமூகத்தினர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக தீவிர பிரசாரத்தையும் நடத்தி வருகின்றனர். இதனால் பா.ஜ.க. அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளது.
ஆனந்திபென் மாற்றம்?
அதே நேரத்தில் நகர்ப்புற வாக்குகள், உயர்ஜாதியினர், தாழ்த்தப்பட்டோர் வாக்குகள் தங்களுக்குத்தான் கிடைக்கும் என்ற பெரும் நம்பிக்கையோடு பா.ஜ.க. இருக்கிறது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. படுதோல்வியை சந்தித்தால் அது 2017 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலிலும் கடுமையாக எதிரொலிக்கும். ஆகையால் உடனடியாக முதல்வர் ஆனந்திபென்னை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை பா.ஜ.க. மேற்கொள்ள வாய்ப்புள்ளது. மேலும் படேல் சமூகத்தினரை அமைதிப்படுத்தும் யுக்திகளையும் பா.ஜ.க. கையாளத் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.