பஞ்சாப் தாக்குதல்: 10 நாட்களுக்கு முன்பே துப்பு கிடைத்தும் கண்டுகொள்ளப்படவில்லை
டெல்லி: உளவுத் துறையின் தோல்வியும் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த ஒரு காரணம் ஆகும். பஞ்சாபில் மீண்டும் சீக்கிய தீவிரவாதம்
தலைதூக்குவதை தான் அனைவரும் கவனித்தனர். ஆனால் காஷ்மீர் மூலம் இந்தியாவுக்குள் பல முறை நுழைய முயன்று தோல்வி அடைந்த தீவிரவாதிகள் வேறு வழியாக வருவார்கள் என்பதை கவனிக்க தவறிவிட்டனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் காஷ்மீர் அல்லாத புதிய வழியாக இந்தியாவுக்குள் நுழையக்கூடும் என்று எல்லைப் பாதுகாப்பு படையினருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு தகவல் கிடைத்தது. தீவிரவாதிகள் பஞ்சாப் வழியாக இந்தியாவுக்குள் நுழைவார்கள் என்று தகவல் கிடைத்தது.
சீக்கிய தீவரவாதம் தலைதூக்குவது பற்றி தான் மாநில, மத்திய அரசுகள் ஆலோசித்தன. பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா அல்லது ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்போ பஞ்சாபில் தாக்குதல் நடத்த திட்டமிடவில்லை. இருப்பினும் அந்த அமைப்புகள் பஞ்சாபைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளித்து வருவதாக இந்திய உளவுத் துறை மற்றும் ரா அமைப்பு குற்றம் சாட்டின.
கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகள் காஷ்மீர் வழியாக இந்தியாவுக்குள் நுழைய பலமுறை முயன்றனர். அவர்களை குறைந்தது 12 முறையாவது எல்லை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர்.
குர்தாஸ்பூர் தாக்குதல் பல அதிகாரிகளுக்கு வியப்பை அளித்துள்ளது. தீவிரவாதிகள் குர்தாஸ்பூரை குறி வைக்கவே இல்லை. முன்னதாக 1990களில் தான் குர்தாஸ்பூரை தீவிரவாதிகள் தாக்கக்கூடும் என்று கூறப்பட்டது.
பஞ்சாபில் லக்ஷ்கர் இ தொய்பா அல்லது ஜெய்ஷ் இ முகமது அமைப்பு ஆட்கள் இல்லை. பஞ்சாப் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்குள் எழுதப்படாத ஒரு ஒப்பந்தம் உள்ளது. அதாவது நீ என் எல்லைக்குள் வராதே நான் உன் எல்லைக்குள் வரமாட்டேன் என்பது தான் அது. அப்படி இருந்தும் குர்தாஸ்பூரில் தாக்குதல் நடத்தப்பட்டது வியப்பளிக்கிறது.